<div id="Middlecolumn_internal" style="text-align: justify;"> <h3 style="text-align: justify;">பக்கவாதம்</h3> <p style="text-align: justify;">Stroke, paralytic attack என ஆங்கிலத்தில் கூறுவதைப் பக்கவாதம் எனத் தமிழில் கூறுவார்கள். இந்த நோயும், நோயின் தன்மைகள் என்ன என்று மக்களுக்குத் தெரியவேண்டும். பக்கவாதம் என்பது இரண்டு வகைப்படும். ஒன்று ischemic stroke என்பது. இதில் மூளைக்குப் செல்லும் இரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படும். அவ்வாறு அடைப்பு ஏற்பட்ட பின் அந்த மூளையின் நரம்பு செல்கள் எல்லாம் செயலிழந்து போய்க்கொண்டிருக்கும்.</p> <p style="text-align: justify;">மற்றொன்று முற்றிலும் எதிரானது அதனை இரத்த வெடிப்பு என்போம். இரத்தக்கொதிப்பினால் மூளைக்குப் போகின்ற இரத்தக்குழாய் வெடிப்பதால் மூளையில் இரத்தக்கசிவு ஏற்படுவது Hemorrahagic Stroke. இந்த இரண்டு வகையான பக்கவாதத்திற்கும், வைத்தியங்கள் , காரணங்கள் எல்லாமே வித்தியாசப்படும். இதை ஏன் தெரிந்துகொள்ளவேண்டும், பக்கவாதம் என்றால் என்ன? அதனால் என்ன தொந்தரவு வருகிறது</p> <h3 style="text-align: justify;">நோக்கம்</h3> <p style="text-align: justify;">இப்பொழுது மக்களுக்கு புற்றுநோய், இதயநோய் என்ன என்பது அனைவருக்குமே சிறிது சிறிதாக அறிமுகமாகிக்கொண்டிருக்கிறது. நெஞ்சுவலி என்றால் உடனே மாரடைப்பு என்று தெரிந்துகொண்டு உடனடியாக மருத்துவமனைக்குச் செல்கிறார்கள். பின் தொடர்ந்து பரிசோதனை செய்து சிறிது நாள் மாத்திரைகளை எடுத்துக்கொள்கிறார்கள் பின் வேலைக்குச் செல்கிறார்கள்.</p> <p style="text-align: justify;">ஆனால் பக்கவாதம் என்பது அவ்வாறு இல்லை. அதற்கு சிறிய அறிகுறி கிடையாது. மூளையின் செயல்களில் ஒவ்வொன்றும் செயலிழக்கச் செயலிழக்க பக்கவாதத்தின் அறிகுறி வித்தியாசமாக இருக்கும். அதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் 6 விநாடியில் ஒருவருக்கு பக்கவாதம் வந்துகொண்டிருக்கிறது. ஆறு நபர்கள் ஓரிடத்தில் இருக்கிறோம் என்றால் அந்த ஆறு நபர்களில் ஒருவருக்கு பக்கவாதம் அவர்களுடைய வாழ்க்கையில் ஒருமுறை வரும். இப்பொழுது 30 மில்லியன் மக்கள் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 30 சதவீதத்திலிருந்து 40 சதவீதம் வரை பக்கவாதம் வந்த அந்த நாளே இறக்கிறார்கள். உலகத்தில் மக்கள் இறப்பதற்கு முக்கியமான நோய் மாரடைப்புதான். இரண்டாவது முக்கியமான நோய் பக்கவாதம். பக்கவாதம் என்று வந்துவிட்டால் நடக்க முடியாது, பேசமுடியாது, ஞாபகசக்தி இருக்காது இவையெல்லாம் ஒருவகையில் ஊனமே.</p> <p style="text-align: justify;">எந்த நோய் மனிதர்களுக்கு வரும் ஊனத்திற்கு மிகமுக்கியமான காரணம் என்று பார்த்தோமென்றால் அது பக்கவாதம் தான். ஏனென்றால் நெஞ்சுவலி வந்தால் கூட அதைச் சரி செய்யலாம், வேலைக்குச் செல்லலாம், சம்பாதிக்கலாம், குடும்பத்தை கவனித்துக் கொள்ளலாம். ஆனால் பக்கவாதம் என்று வந்துவிட்டால் அவர்கள் படுத்த படுக்கையாகிவிடுவார்கள். அவர்கள் வாழ்க்கையில் நடக்கமுடியாது, எந்த வேலைக்கும் போக முடியாது, சம்பாதிக்க முடியாது. இது அவர்களுக்கு மட்டுமே தொந்தரவு கிடையாது. மக்கள் சமூகத்திற்கே இது ஊனம்.</p> <h3 style="text-align: justify;">பக்கவாதத்தின் அறிகுறிகள்</h3> <p style="text-align: justify;">நன்றாக இருப்பார்கள் திடீரென்று கை, கால் வராமல் போவது, ஒருபுறம் வாய் கோணலாகப் போவது, சிலருக்கு பேசுவதற்கு வார்த்தை வராது, ஒருசிலர் பேசுவார்கள் ஆனால் வாய் உளரும். ஒருசிலருக்கு இடது கையோ, வலது கையோ மறத்துப்போதல், இன்னும் சிலருக்கு நடை தடுமாறுதல், சிலருக்கு இரண்டிரண்டாகத் தெரிவது, தலைசுற்றுவது என இந்த மாதிரி மூளையில் எந்தப் பகுதியில் இரத்தக்குழாயில் அடைப்பு இருக்கிறதோ அதனுடைய செயல்கள் இழந்து போவதால் அறிகுறிகள் நிறைய வரும். இன்று மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளில் இது என்ன நோய் என எந்தப் பரிசோதனையும் பண்ணுவதற்கு முன்பே, கண்மூடித்தனமாக இது பக்கவாதம் என்பார்கள். முக்கியமாக மக்களுக்குத் திடீரென்று ஏதோ ஒரு காரணத்தினால் கை, கால் விளங்காமல் போவது, வாய் கோணித்துக்கொள்வது, பேச்சு வராமல் இருப்பது இந்த மூன்றும் முக்கியமான அறிகுறி. இந்த விதமான அறிகுறி இருந்தது என்றால் உடனே அதைப் பக்கவாதம் என்று தெரிந்து அருகாமையில் இருக்கிற பக்கவாதத்திற்கான மருத்துவ வசதி உள்ள மருத்துவமனையை அணுக வேண்டும். இது ஏன் முக்கியம் என்றால் அவர்கள் அருகில் உள்ள சிறிய மருத்துவமனைக்கோ, செவிலியர் விடுதிக்கோ சென்றார்கள் என்றால் அவர்களுடைய பொன்னான நேரம் வீணாகிவிடும்.</p> <p style="text-align: justify;">அவர்கள் மற்றொரு மருத்துவரைப் பார்க்கச் சொல்வார்கள், அந்த மருத்துவர் ஸ்கேன் எடுக்கச்சொல்வார்கள் அதன் பிறகு மருத்துவரைச் சந்திக்க வேண்டும். இதனால் நேரம் வீணாகிவிடுகிறது. பக்கவாதம் வந்தவருக்கு ஒவ்வொரு வினாடியும் முக்கியமானது. ஏனென்றால் பக்கவாதம் வந்தவுடன் ஒவ்வொரு வினாடியும் 1.9 மில்லியன் நரம்பு செல்கள் செயலிழந்து போய்க்கொண்டிருக்கும். 1 மணி நேரத்திற்கு 120 மில்லியன் செல்கள் செயலிழந்து போய்விடும். பக்கவாதம் வந்த பிறகு ஒருவருடைய வயது 39 வருடங்கள் குறைந்துவிடும். பக்கவாதம் வராமல் இருக்கும் 60 வயது உடைய ஒருவர் 90 வயது வரை இருக்கிறார் என்றால் பக்கவாதம் வந்த ஒருவர் 60 வயதிலேயே 90 வயதானவர் போல் படுத்த படுக்கையாகி விடுகிறார். எனவே வாழ்நாளில் 34 வருடம் பாதிக்கப்படுகிறது. இந்த மாதிரி ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு விநாடியும் காலம் தாமதிக்காமல் அருகாமையில் உள்ள சி.டி. ஸ்கேன் உள்ள பக்கவாதத்திற்குரிய மருத்துவமனையை அணுக வேண்டியது மிகவும் முக்கியம்.</p> <h3 style="text-align: justify;">பயன்கள்</h3> <p style="text-align: justify;">பக்கவாதம் வந்த பிறகு ஆக்சிசனும், இரத்தமும் மூளைக்குச் செல்லாததால் சுற்றியிருக்கிற நரம்புகள் எல்லாம் செயலிழந்து போய்க்கொண்டே இருக்கும். அதற்கு ஆக்சிசனும், இரத்தமும் தேவை என்றால் இரத்தக்குழாயைத் திறக்க வேண்டும். அதற்கான மருத்துவமுறைக்கு Stroke Thrombolytics Treatment என்று பெயர். அதாவது ஒரு ஊசியைக் (Injection?) கொடுத்து, எந்த இடத்தில் அடைப்பு இருக்கிறதோ அந்த அடைப்பை எடுப்பது. இதை எல்லா நேரமும் பண்ண முடியாது. பக்கவாதம் வந்து 4.30 மணி நேரத்திற்குள் மருத்துவமனை வந்துவிட்டார்கள் என்றால் மூளையில் அடைப்பு இருந்தது தெரிந்தபின் உட்செலுத்துதல் (Injection) மூலம் மருந்தைக் கொடுத்தோம் என்றால் அந்த அடைப்பிலிருந்து விடுவித்து உங்களுக்கு செயலிழந்தவற்றை செயல்படச் செய்ய வாய்ப்பு இருக்கிறது.</p> <p style="text-align: justify;">அந்த (Injection) மருந்து எல்லாச் சிறிய மருத்துவமனைகளிலும் கொடுக்க முடியாது. இந்த (Injection) மருந்தானது தொடக்கநிலை பக்கவாதத்திற்கு மிகவும் சிறப்பானது. ஏனென்றால் பக்கவாதம் வந்த உடலில் அவ்வளவு பக்கவிளைவு இருக்கிறது, சிக்கல்கள் இருக்கிறது. இவற்றைப் பக்கவாதத்திற்கான சிகிச்சை அளிக்க சிறப்புமருத்துவர் குழு பல தேவைப்படும். Radiology department, physiotherapy என பக்கவாதத்திற்கான சிறப்பு சிகிச்சைகளை இந்நோய்க்கு உரிய மருத்துவர்களைக் கொண்டே செயல்படுத்த முடியும். அவ்வாறு நோயாளிகள் வந்தால்தான் ICU வில் அனுமதித்து ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் இரத்தகொதிப்பு முறை சிகிச்சை செய்து, பக்கவாதத்திற்க்கான மருந்தைக் கொடுத்தப்பின் நல்ல விளைவு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.</p> <p style="text-align: justify;">பக்கவாதம் எந்த வயதில் வரும் என்று பார்த்தால் அது எல்லா வயதிலும் வரலாம். ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளில் 60 வயதிலிருந்து 80 வயதிற்குள் வந்திருக்கிறது. ஆனால் ஜப்பான், ஆசிய நாடுகள், மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் வாழும் அதிக மக்களுக்குச் சர்க்கரை நோய் இருக்கிறது. அப்படி இருக்கும் பொழுது 10 வருடத்திற்கு முன்பாகவே இந்தியாவில் பக்கவாதம் என்ற நோய் வந்திருக்கிறது.</p> <p style="text-align: justify;">இந்த நோய் எந்த வயது உள்ளவர்களுக்கு வரும் என்று பார்த்தீர்கள் என்றால் எல்லா வயதினரையும் தாக்கும். முக்கியமாக 50 முதல் 80 வயது உள்ளவர்களைத் தாக்கும். இந்த பக்கவாதம் ஒரு கொடிய நோய் என்று கூற முடியாது. மருத்துவம் கிடையாது என்று கூற முடியாது. ஆனால் பக்கவாதத்தின் அறிகுறி தெரிந்து குறித்த நேரத்தில் செயல்பட்டு அதற்கான வைத்தியத்தைச் சரியாக எடுத்துக்கொண்டோம் என்றால் முடிந்த வரை அந்த நோயிலிருந்து காக்கலாம். அதைச் செய்யாமல் விட்டுவிட்டார்கள் என்றால் கண்டிப்பாக அவர்களுடைய வாழ்க்கையில், அவர்களின் குடும்பம், சமூகம் பாதிக்கப்படுவது உண்மைதான்.</p> <h3 style="text-align: justify;">பக்கவாதம் வருவதற்கான காரணங்கள்</h3> <p style="text-align: justify;">மனிதர்களுக்கு மாரடைப்பு வருவதற்கு என்னென்ன காரணமோ அதே காரணம் தான் பக்கவாதத்திற்கும். ஒருவருக்கு இரத்த அழுத்தம் இருக்கும் ஆனால் மாத்திரை எடுத்துக்கொள்ளாமல் கவனமில்லாமல் இருப்பது. இரத்தகொதிப்பு என்று கண்டுபிடித்தபின் அன்றிலிருந்து மருத்துவரைச் சந்தித்து அதற்கான மருந்துகளை முறையாக கடைபிடித்து கட்டுப்பாடுடன் இருந்தால் நல்லது.</p> <p style="text-align: justify;">இது மிகவும் கொடியது. இந்நோய் எளிதில் வெளியில் தெரியாது. இது 6 மாதத்திற்கு ஒருமுறை பரிசோதனை செய்துகொண்டு நோய் இருக்கிறதா? இல்லையா? என்று கண்டுபிடித்து வைத்தியம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதுவும் இல்லாமல் சிலர் பார்த்தீர்கள் என்றால் புகைபிடித்தல், மதுபானம் இந்த மாதிரியான பழக்கத்தினால் மூளைக்குச் செல்கிற இரத்தக்குழாயில் சிறிது சிறிதாக அடைப்புகள் ஏற்படுகிறது. அந்த அடைப்புகள் சிறிது சிறிதாக அதிகமாகி ஒருநாள் திடீரென்று இரத்தக்குழாய் அடைத்துக்கொள்ளும். அதன்பிறகு மூளை பாதிப்பு, பக்கவாதம் என்று வரும். இவையெல்லாம் பொதுவான காரணங்கள்.</p> <p style="text-align: justify;">குறிப்பாக இளம் வயதினர்களான 30 வயதிலிருந்து 40 வயதிற்குள் பக்கவாதம் வருகிறது. அதற்குக் காரணம் மன அழுத்தம், சரியாக நடைபயிற்சி எடுக்காமல் இருப்பது, உடல்நிலையை கவனிக்காமல் இருப்பது, உடலைச் சீராக வைத்துக்கொள்ளாமல் இருப்பது, புகைப்பிடிப்பது, மது அருந்துவது, தூக்கமின்மை, உடற்பயிற்சி இல்லாமல் இருப்பது இந்த மாதிரியான வாழ்க்கையை வடிவமைத்துக்கொண்டால் அவர்களுக்கு நிச்சயம் பக்கவாதம், மாரடைப்பு வர வாய்ப்பு இருக்கிறது. அதனால் தான் இந்தியாவில் பக்கவாதமும், மனஅழுத்தமும், சர்க்கரை நோய்களும் அழையா விருந்தாளியாக அதிகம் வந்துகொண்டிருக்கிறது.</p> <h3 style="text-align: justify;">தடுக்கும் முறை</h3> <p style="text-align: justify;">ஒரு முறை பக்கவாதம் வந்தது என்றால் திரும்பத்திரும்ப பக்கவாதமும், மாரடைப்பும் வர வாய்ப்புகள் இருக்கிறது. ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு பக்கவாதம் இருந்தால் மற்றவருக்கும் வர வாய்ப்பு இருக்கிறது. அதேபோல் ஒருவருக்கு ஒருமுறை பக்கவாதம் வந்தாலும் மறுமுறையும் வர வாய்ப்பு இருக்கிறது. மாரடைப்பும், பக்கவாதமும் வந்தவுடன் அதைக் கண்டுபிடித்து வைத்தியம் செய்து, அது திரும்பவும் வராமல் தடுப்பதற்கு வாழ்க்கை முழுவதும் மாத்திரை எடுத்துக்கொள்ளவேண்டும் அது மிகவும் முக்கியமானது.</p> <h3 style="text-align: justify;">பக்கவாதத்திற்கான மருத்துவமுறை</h3> <p style="text-align: justify;">இதற்கு நிறைய மருத்துவமுறை இருக்கிறது. கடந்த 10, 15 வருடமாகத்தான் இந்த நோய் தீர்க்கக் கூடிய ஊசி, மருந்து, மாத்திரைகள் (Injection) எல்லாம் வந்திருக்கிறது. அதற்கு முன்னால் இந்நோய்க்கு மக்கள் வைத்தியம் பண்ணாமலே இருந்திருக்கிறார்கள். அபூர்வமாக சிலர் வைத்தியம் பண்ணாமலே பிழைத்திருக்கிறார்கள். இது உயிர்கொல்லிநோய்தான் ஆனால் மூளையில் பெரும்பான்மையான பகுதியில் அடைப்பு இருந்தால் மட்டுமே உயிரைக்கொல்லும். சிறியதாக வந்தது என்றால் அவர்கள் வாழ்க்கை முழுவதும் நன்கு வாழமுடியும். மாறாக மூளை செயலிழந்து போனால் அந்த செயல் திரும்பவும் கிடைக்காது.</p> <p style="text-align: justify;">ஒருசிலர் பேசமுடியாமலே இருப்பார்கள், கை கால் வராமலே இருப்பார்கள், பார்வை போய்விடும், ஒரு சிலருக்கு நிற்க முடியாது சக்கர நாற்காலியிலே இருப்பார்கள். இதற்கான சிகிச்சை முறை என்னவென்று பார்த்தீர்கள் என்றால் அதில் முக்கியமானது வரும் முன் காப்பதே. நடைபயிற்சி, புகைக்காமல் இருப்பது, மதுபானத்தை விடுவது, சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தம் இருந்தால் அதை கட்டுப்படுத்துவது இந்த முறையை மேற்கொண்டாலே வரும் நோயைத் தடுக்க முடியும்..</p> <p style="text-align: justify;">எடுத்துக்காட்டாக குடும்பத்தில் யாருக்கேனும் பக்கவாதம் இருந்தது என்றால் நமக்கு அவ்வாறான நோய் இருக்கிறதா? என்று முன்னெச்சரிக்கையுடன் பரிசோதித்துக்கொள்வது மிக நல்லது. பக்கவாதமும், மாரடைப்பும் வருவதற்கு முன்னாலே அதைத் தடுக்க வாய்ப்பு இருக்கிறது.</p> <p style="text-align: justify;">இரண்டாவது உங்களுக்கு பக்கவாதம் வந்துவிட்டது அடுத்து என்ன செய்யவேண்டும் என்றால் உடனடியாக ஒவ்வொரு வினாடியும் தாமதிக்காமல் செயல்படவேண்டும். நோயாளிகளால் சொல்ல முடியாது எனக்கு பக்கவாதம் வந்துவிட்டது என்று. காரணம் இதற்க்கான அறிகுறிகளை அவர்கள் அறியாதிருப்பதே காரணம். எனவே உடனிருப்பவர்கள் இதனுடைய அறிகுறிகள் பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும். இதற்கான விழிப்புணர்வு மிக அவசியம்.</p> <p style="text-align: justify;">ஒருவருக்கு வாய் கோணித்துக்கொண்டது, கை கால் செயல் இழந்துவிட்டது என்றால் அவரைப் படுக்க வைத்து மாத்திரை கொடுத்து மசாஜ் என்று செய்யாமல் உடனே மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று வைத்தியம் பண்ணுவது மிக முக்கியம். சில நபர்கள் எண்ணெய் இட்டு மசாஜ் பண்ணுவது, உடற்பயிற்சி எடுப்பது மட்டும் செய்தால் போதும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். கண்டிப்பாகப் பக்கவாதம் வந்தவர்களுடைய தளர்ச்சியைக் குறைப்பதற்கு உடற்பயிற்சி மிகவும் முக்கியம். வெறும் எண்ணெய் மட்டும் தேய்த்தால் தோல்தான் பளபளவென்று ஆகுமே தவிர சதைகள் எல்லாம் வழக்கமான நிலைக்கு வராது, நரம்புத்தளர்ச்சி குறையாது. பக்கவாதம் வந்தவர்கள், மறுபடியும் பக்கவாதம் வராமல் இருப்பதற்கு antiplatelet என்று Aspirin மாத்திரை, கொழுப்பை குறைக்கக்கூடிய மாத்திரை, இரத்த அழுத்தத்திற்கான மாத்திரை, சர்க்கரை நோய்க்கான மாத்திரை என்று இந்த மாதிரியான மாத்திரைகளை வாழ்க்கை முழுவதும் எடுத்துக்கொண்டோம் என்றால் அடுத்தடுத்து பக்கவாதம் வராமல் தடுக்கலாம்.</p> <p style="text-align: justify;">பக்கவாதம் என்ற நோயைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றால் நம் உணவு முறையில் கட்டுப்பாடாக இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் யாருக்காவது பக்கவாதம் வந்தது என்றால் அந்தக் குடும்பத்தில் வேறு ஒருவருக்கு வராமல் இருப்பதற்கு அந்தக் குடும்பம் முழுவதும் உணவுமுறையைக் கட்டுப்படுத்த வேண்டும். எண்ணெய்ப் பொருட்களைக் குறைக்கலாம். உணவுப் பொருட்களை எண்ணெயில் வறுக்காமல் கொதிக்கவைத்து உணவுகளைச் சாப்பிடலாம். உணவுகளில் உப்புகளைக் குறைத்துக்கொண்டோம் என்றால் இரத்த அழுத்தம் குறையும், பக்கவாதம், மாரடைப்பும் குறையும்.</p> <p style="text-align: justify;">சர்க்கரை நோய் இருப்பவர்களுக்குச் சர்க்கரை இல்லாமல் எடுத்துக்கொள்ளவேண்டும். சிலர் சைவம் சாப்பிடுபவர்களுக்குப் பக்கவாதம் வராது, அசைவம் சாப்பிடுபவர்களுக்குப் பக்கவாதம் வரும் என்று எண்ணுவார்கள் அவ்வாறு கிடையாது. எந்தவொரு உணவில் கொழுப்பு அதிகமாக இருக்கிறதோ அது சைவமாக இருந்தாலும் சரி அசைவமாக இருந்தாலும் சரி அவற்றை எடுத்துக்கொண்டோம் என்றால் அது கண்டிப்பாகப் பாதிப்பை உண்டுபண்ணும். உணவுமுறை என்று எடுத்துக்கொண்டீர்கள் என்றால் அதிக சத்துள்ள பழங்கள், காய்கறிகளை எடுத்துக்கொள்ளவேண்டும். அதிகமாக இருக்கின்ற எண்ணெய், கொழுப்பு இவற்றையெல்லாம் குறைத்தாலுமே பாதிநோய் வராமலே தடுக்கலாம்.</p> <h3 style="text-align: justify;">கேள்வி பதில்கள்</h3> <p style="text-align: justify;"><strong>பக்கவாதம் என்றால் என்ன?</strong></p> <p style="text-align: justify;">பக்கவாதம் மூளை தாக்கப்படுதல் எனவும் அழைக்கப்படும். மூளைக்கு இரத்தம் செல்வதில் உண்டாகும் இடையூறை இது குறிக்கிறது. பாதிக்கப்பட்ட மூளைப் பகுதிக்கு உயிர்வளியும் சத்துக்களும் கிடைக்காததால் செல்கள் மரணம் அடைகின்றன.</p> <p style="text-align: justify;"><strong>பக்கவாதத்தை எவ்வாறு இனங்காணுவது?</strong></p> <p style="text-align: justify;">பக்கவாதத்தால் பாதிக்கப் பட்டவருக்குக் கீழ்க்காணும் அறிகுறிகள் காணப்படும்:</p> <ul style="text-align: justify;"> <li>கை, கால், முகத்தில் திடீர் பலவீனம் அல்லது உணர்ச்சியின்மை</li> <li>பேசுவதில் சிரமம்</li> <li>பார்வையில் கோளாறு</li> <li>நடப்பதில் சிரமம்</li> <li>தலைச்சுற்றல்</li> <li>சமநிலை இழப்பு</li> <li>கடும் தலைவலி</li> </ul> <p style="text-align: justify;"><strong>இரு வகையான பக்கவாதங்கள் எவை?</strong></p> <p style="text-align: justify;">இரத்தக்கசிவு பக்கவாதம்</p> <p style="text-align: justify;">பலவீனமான இரத்தக் குழல்கள் சிதைந்து சுற்றி இருக்கும் மூளைத் திசுக்களுக்குள் கசியும் போது பக்கவாதம் உண்டாகிறது. இரத்தம் தேங்கி மூளையை அழுத்தும் போது மூளை செல்கள் இறக்கின்றன.</p> <p style="text-align: justify;">குருதியூட்டக் குறை பக்கவாதம்</p> மூளையின் சில பகுதிகளுக்கு இரத்த ஓட்டம் தடைபடும் போது பக்கவாதம் ஏற்படுகிறது. இரத்த ஊட்டக் குறைவினால் மூளை செல்கள் மரணம் அடைகின்றன. இதனால் ஒருவருக்கு நடத்தல் பேசுதல் போன்ற முக்கிய வேலைகளை ஆற்ற முடியாமல் போய்விடுகிறது. <p style="text-align: justify;">ஆதாரம்: மலர் மருத்துவமனை, அடையாறு, சென்னை</p> </div>