<div id="MiddleColumn_internal"> <h3 style="text-align: justify; ">மார்பகப் புற்றுநோய்</h3> <p style="text-align: justify; ">(Breast cancer) என்பது மார்பகத் திசுக்களில் ஆரம்பிக்கும் புற்றுநோய்களைக் குறிக்கும், இது பெரும்பாலும் பால் சுரப்பி நாளங்களின் அல்லது அந்த குழாய்களுக்கு பாலைக் கொண்டு சேர்க்கும் நுண்ணறைகளின் உள் அடுக்குகளில் தோன்றும். நாளங்களில் உருவாகும் புற்றுநோய்களுக்கு நாள புற்றுநோய் (டக்டல் கார்சினோமாஸ்) என்று பெயர்</p> <h3><span>யாருக்கு அதிகம் ஏற்படும்?</span></h3> <p style="text-align: justify; "><span>ஆண்களுக்குக் கூட மார்புப் புற்றுநோய் வரலாம். பெண்களே பெருவாரியாகப் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களில் எத்தகையவர்களுக்கு இது வருவதற்கான வாய்ப்பு அதிகம்?</span></p> <ul> <li style="text-align: justify; "><span>தாய், சகோதரி என நெருங்கிய குடும்ப உறவினர்களிடையே காணப்பட்டால் வாய்ப்பு அதிகமாகும்.</span></li> <li style="text-align: justify; "><span>மகப் பேறு இல்லாத பெண்களுக்கு.</span></li> <li style="text-align: justify; "><span>காலம் கடந்து முதுவயதில் தாய்மைப் பேறு அடைந்தவர்களுக்கு ஏனையவர்களை விட அதிக சாத்தியம் உள்ளது.</span></li> <li style="text-align: justify; "><span>மாதவிடாய் நின்ற பின்னர் திடீரென அதிகளவு எடை கூறியவர்கள்.</span></li> <li style="text-align: justify; "><span>பெண் ஹோர்மோன் ஆன ஈஜ்ரோஜனைத் தூண்டுவதற்கான சிகிச்சைகளை நீண்டகாலம் செய்தவர்களுக்கு.</span></li> <li style="text-align: justify; "><span>மிகக் குறைந்தளவு வயதிலேயே பூப்படைந்தவர்களுக்கு.</span></li> <li style="text-align: justify; "><span>மிகப் பிந்திய வயதிலேயே மாதவிடாய் முற்றாக நின்றவர்களுக்கு.</span></li> <li style="text-align: justify; "><span>ஈஜ்ரோஜன் அடங்கிய கருத்தடை மாத்திரைகளை மருத்துவ ஆலாசனை இன்றி நீண்ட காலம் உபயோகித்தவர்களுக்கு மார்புப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.</span></li> </ul> <h3><span>அறிகுறிகள்</span></h3> <ul> <li style="text-align: justify; "><span>முக்கியமானது மார்பில் தோன்றும் வீக்கங்களும் கட்டிகளுமாகும். வலி இருக்கிறதோ இல்லையோ எத்தகைய மாற்றங்களும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டியவையே.</span></li> <li style="text-align: justify; "><span>மார்புக் கச்சையின் அளவும் ஆரோக்கியமும் சாதாரண அவதானத்தில் அல்லது கண்ணாடி முன் நின்று பார்க்கும்போது மார்பக அளவுகளில் மாற்றம் தென்பட்டால் அசட்டை செய்ய வேண்டாம். சிலருக்கு இயல்பிலேயே ஒரு மார்பு மற்றதைவிடப் பெரிதாக இருக்கும். இது பயப்பட வேண்டியதில்லை. ஆனால் அந்ந அளவுகளில் புதிய மாற்றம் ஏற்பட்டால் கவனத்தில் எடுப்பது அவசியம்.</span></li> <li style="text-align: justify; "><span>மார்பின் மேற்பரப்பில் ஏதாவது பள்ளம் அல்லது உட்குழிவு ஏற்பட்டால்.</span></li> <li style="text-align: justify; "><span>மார்பக தோலின் மிருதுத் தன்மையில் மாற்றம் ஏற்பட்டால், முக்கியமாக தோடம்பழத்தில் உள்ளது போல சிறு திட்டிகளும் பள்ளங்களுமாக மாற்றம் ஏற்பட்டால்.</span></li> <li style="text-align: justify; "><span>முலைக்காம்பின் தோற்றத்தில் மாற்றம். அல்லது துருத்திக் கொண்டிருந்த முலைக்காம்பு உள்வாங்கப்பட்டால்.</span></li> <li style="text-align: justify; "><span>முலைக் காம்பின் ஊடாகத் திரவம் வெளியேறினால்.</span></li> <li style="text-align: justify; "><span>மார்பகத்தில் வலி ஏற்பட்டால். சில பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் வழமையாக வலி ஏற்படுவதுண்டு. இதைத் தவிர ஏதாவது வலி ஏற்பட்டால் மருத்துவரைக் காண வேண்டும்.</span></li> </ul> <h3><span>பரிசோதனைகள்</span></h3> <p style="text-align: justify; "><span>மார்பகத்தில் கட்டியிருந்தால் அல்லது இருக்கிறதா எனச் சந்தேகம் எழுந்தால் பரிசோதனைகள் மூலமே விடை காண முடியும்.</span></p> <ol> <li style="text-align: justify; "><span>மாமோகிராம் அல்லது மார்பக கதிர்ப்படம் என்பது மிக முக்கியமானதாகும். கைகளினால் தடவிக் கண்டு பிடிக்க முடியாத சிறிய கட்டிகளைக் கூட மிக ஆரம்ப நிலையிலேயே கண்டறிய உதவுகிறது. வழமையன கதிர்படங்கள் (X Ray) போலல்லாது மிகக் குறைந்தளவு கதிர்வீச்சு மட்டுமே பயன்படுத்தப்படுவதால் ஆபத்தற்றது.</span></li> <li style="text-align: justify; "><span>ஸ்கேன் (Ultra Sound Scan) பரிசோதனை, கட்டியிருக்கிறதா எனச் சந்தேகம் இருந்தால் அதனைக் கண்டறிய மிக உதவியானது. அதிலும் முக்கியமாக இளம் பெண்களில் கட்டி மிகத் தெளிவாகத் தெரியும்.</span></li> <li style="text-align: justify; "><span>சிறிய ஊசி மூலம் கட்டியிலுள்ள சிறியளவு திசுக்களைப் உறிஞ்சி எடுத்து பெற்று இழையவியல் பரிசோதனை செய்தல். கட்டியானது ஆபத்தற்ற சாதாரண கட்டியா புற்றுநோயா போன்ற விபரங்களை அறிய இது அவசியமாகும்.</span></li> </ol> <p style="text-align: justify; "><span>மார்பக புற்றுநோயானது முதலில், அறுவைசிகிச்சை மூலமாகவும் பின்னர் மருந்துகள், கதிரியக்கம் அல்லது இரண்டினாலும் சிகிச்சையளிக்கப்படுகிறது. கண்டறிதல் மற்றும் மீண்டும் வருவதற்கான வாய்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் சிகிச்சைகள் அதிக தீவிரத்துடன் தரப்படுகின்றன.</span></p> <p style="text-align: justify; "><span>நல்ல முன் கண்டறிதலுடன் கூடிய ஆரம்பநிலை கான்சர்கள் லம்பெக்டோமி மற்றும் கதிரியக்கம் ஆகியவை மூலம் மட்டுமே சிகிச்சையளிக்கப்படுகின்றன. மிகவும் குறைவாக கண்டறியப்பட்ட மற்றும் மீண்டும் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் கொண்ட பிந்தைய நிலை கான்சர்கள் அதிதீவிர கீமோதெரபி மூலமாக சிகிச்சையளிக்கப்படுகின்றன.</span></p> <p style="text-align: justify; "><span>இதில் விரும்பத்தகாத மற்றும் வாழ்வுக்கு ஆபத்தளிக்கக் கூடிய பக்க விளைவுகளும் இருக்கக்கூடும், இவை குணமாவதற்கான வாய்ப்புகள் மற்றும் மீண்டும் வருவதற்கான வாய்ப்புகளை குறைப்பதற்காக செய்யப்படுகின்றன.</span></p> <p style="text-align: center; "><span><img title="" class="image-inline" alt="" src="https://static.vikaspedia.in/media_vikaspedia/ta/images/health/ba8bafbcdb95bb3bcd/baabc1bb1bcdbb1bc1-ba8bafbcd/Breastcancer.jpg" /></span></p> <h3 style="text-align: justify; ">கேள்வி பதில்கள்</h3> <p style="text-align: justify; ">மார்பக புற்றுநோய் ஏன் ஏற்படுகிறது?</p> <p style="text-align: justify; ">இதற்கு தெளிவான ஆய்வு முடிவுகள் இல்லை. செல்களில் ஏற்படக்கூடிய அபரிமிதமான வளர்ச்சியே, புற்றுநோய்க்கு காரணம்.</p> <p style="text-align: justify; ">இதில் வகைகள் உள்ளதா?</p> <p style="text-align: justify; ">மார்பக புற்று நோயில் வகைகள் கிடையாது. எல்லா புற்றுநோய்களையும் போல, இதிலும் நான்கு நிலைகள் உள்ளன.</p> <p style="text-align: justify; ">எவ்வாறு பரவுகிறது?</p> <p style="text-align: justify; ">மார்பக செல்லில் ஏற்பட்ட மாற்றம், நிணநீர் முடிச்சு வழியாக, உடலில் எங்கு வேண்டுமானாலும் பரவலாம். ஆரம்பத்தில், பால் சுரப்பிகளில் ஏற்படுகிறது. பின், இது மற்ற செல்களுக்கும் பரவுகிறது.</p> <p style="text-align: justify; ">மார்பக புற்றுநோய் வருவதற்கான காரணங்கள் என்ன?</p> <p style="text-align: justify; ">பரம்பரையாக வரலாம். வயது கடந்து திருமணம் செய்வது; 35 வயதிற்கு மேல் குழந்தை பெறுவது; தாய்ப்பால் தராதது; வாழ்க்கை முறை மாற்றம்; சுற்றுச்சூழல் மாசு என்று பல காரணங்கள் உள்ளன.</p> <p style="text-align: justify; ">தாய்ப்பால் தராதவர்களை அதிகம் பாதிக்க காரணம் என்ன?</p> <p style="text-align: justify; ">தாய்ப்பால் தருவதால், புற்றுநோய்க்கு காரணமாகும் சில ஹார்மோன்களின் அளவு உடலில் கட்டுக்குள் வைக்கப்படும். எதிர்காலத்தில் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கும்.</p> <p style="text-align: justify; "><span><strong>ஆதாரம் : </strong>தினகரன் மருத்துவம்</span></p> </div>