<div id="Middlecolumn_internal"> <p style="text-align: justify; ">30 வயதுக்கு பிறகு ஆண்டுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். தாய்மார்கள் குழந்தைகளுக்கு குறைந்தது ஓராண்டு வரை கட்டாயம் பாலூட்ட வேண்டும். உயரத்துக்கு ஏற்ற எடை என்பதற்கு கவனம் கொடுக்க வேண்டும். மாதவிலக்குக்கு இடைப்பட்ட நாட்கள், கர்ப்பகாலம், பாலூட்டும் காலம் ஆகிய காலங்களில் ஏற்படும் இயல்பான மாற்றங்களைத் தெரிந்துவைத்துக் கொண்டால்தான், இயல்புக்கு மாறான மாற்றங்கள் தோன்றினால் அதை உடனே உணர முடியும்.</p> <ul style="text-align: justify; "> <li>தினமும் உணவில் குறைந்தது மூன்று வகையான, ரசாயனக் கலப்பில்லாத காய்கறி, பழங்கள் அவசியம் இடம் பெற வேண்டும். பெண் குழந்தைகளுக்கு பதப்படுத்தப்பட்ட, பாக்கெட் உணவுகள், துரித உணவுகளைத் தவிர்த்தாலே, அவர்கள் அதிவிரைவாகப் பூப்பெய்துவதை தவிர்க்க முடியும்.</li> <li>தக்காளி, கேரட், கருப்பு திராட்சை, மாதுளை, குடமிளகாய், முட்டைக்கோஸ் பப்பாளி, புரொகோலி, பூண்டு ஆகிய ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த புற்றுநோய்க்கு எதிரான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.</li> <li>மிளகாய்த் தூள், மசாலா வகைகளில் சிவப்பு நிறத்தை கூட்ட சூடான் ரெட் டை கலக்கப்படுகிறது. இது புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியது. எனவே, வீட்டிலேயே மசாலாப் பொருட்களைத் தயாரித்து பயன்படுத்துவது நல்லது.</li> <li>ஒருமுறை சமையலுக்குப் பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் சமையலுக்குப் பயன்படுத்தக் கூடாது.</li> <li>தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதனுடன் யோகா, தியானம் செய்வது உடலை ஃபிட்டாகவும், ஹார்மோன்களை சீராக சுரக்கவும் வைக்கும்.</li> </ul> <h3>கேள்வி பதில்கள்</h3> <p style="text-align: justify; ">புற்றுநோய் கட்டியா என, எப்படி தெரிந்து கொள்வது?</p> <p style="text-align: justify; ">முப்பது வயதிற்கு மேற்பட்ட பெண்கள், மாதம் ஒருமுறை சுய பரிசோதனை செய்து கொள்வது அவசியம். கட்டியோ அல்லது மார்பகங்களின் வடிவத்தில் மாற்றமோ தெரிந்தால், உடனடியாக, மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.</p> <p style="text-align: justify; ">அறிகுறிகள்?</p> <p style="text-align: justify; ">மார்பகத்தில் தொடர்ந்து வலி, அசவுகரிய உணர்வு, மார்பகத்தின் அளவு மற்றும் வடிவத்தில் மாற்றம், மார்பு காம்பு சிவந்து உட்பக்கமாக திரும்புதல் போன்றவை.</p> <p style="text-align: justify; ">சுய பரிசோதனை செய்து கொள்வது எப்படி?</p> <p style="text-align: justify; ">கண்ணாடி முன் நின்று, கைகள் இரண்டையும் மேலே துாக்கி, இரு மார்பகங்களும் ஒரே அளவில் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். மார்பகங்களின் எல்லாப் பகுதிகளிலும், விரல்களால் அழுந்தத் தடவி, கட்டிகள் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.</p> <p style="text-align: justify; ">சிகிச்சை முறைகள்?</p> <p style="text-align: justify; ">நோயின் நிலை, புற்றுநோய் செல்களின் எண்ணிக்கை நோயின் தீவிரம் என, இவற்றின் அடிப்படையில் அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு, கீமோதெரபி, ஹார்மோன் தெரபி என, சிகிச்சைகள் தீர்மானிக்கப்படும்.</p> <p style="text-align: justify; ">செயற்கை மார்பகம் எவ்வாறு பொருத்தப்படுகிறது?</p> <p style="text-align: justify; ">செயற்கை மார்பகம் என்பது, சம்பந்தப்பட்டவர்கள் உடலின் வேறு பாகத்தில் இருக்கும் தசையை எடுத்தோ அல்லது செயற்கை சிலிக்கான் மூலமோ உருவாக்குவது. நோயாளிகளின் உடல் நிலையைப் பொருத்தே, அதற்கான சாத்தியம் நிர்ணயிக்கப்படும்</p> <p style="text-align: justify; ">ஆதாரம் - மாலைமலர் நாளிதழ்</p> </div>