<div id="Middlecolumn_internal"> <h3 style="text-align: justify;">அல்சர் எப்படி உருவாகிறது</h3> <p style="text-align: justify;">வாய்க்கு ருசியாக இருக்கிறது என்று வாங்கி சாப்பிடும் உணவுகளில் ஏதேனும் பிரச்னை என்றால், வயிற்றுப் பகுதி தான் முதலில் பாதிப்புக்கு உள்ளாகும். அத்தகைய பிரச்னைகளில் தலையாயது அல்சர்! <span style="text-align: justify;">பெரும்பாலானவர்கள், அந்த நேர வலியிலிருந்து தப்பித்துக்கொள்ள கண்ணில் படும் மருந்துக் கடையில் வலி நிவாரணிகளை வாங்கி விழுங்கிவிட்டு வேறு வேலைகளைப் பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள். </span><span style="text-align: justify;">இதுபோன்ற மாத்திரைகள் அந்த நேரத்துக்கு வலியைக் குறைக்குமே தவிர, நிரந்தரத் தீர்வை ஒருபோதும் தராது. அதுமட்டுமல்ல… பக்க விளைவாக வயிற்றில் புண்கள் அதிகரித்து, முற்றிய அல்சரில் கொண்டுபோய்ச் சேர்ப்பதற்கு அந்த வலி நிவாரணிகளே கூட ஒரு காரணியாகிவிடக்கூடும்.</span></p> <p style="text-align: justify;">டென்ஷன், கவலையால் மனம் பாதிக்கப்படும்போது, இரைப்பையில் மிக அதிகமாக அமிலம் சுரந்து அல்சரில் கொண்டுவிடும். <span style="text-align: justify;">அல்சர் ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணமாகக் கருதப்படுவது, ‘ஹெச் பைலோரை’ (H Pylori) என்ற நுண்கிருமிதான். <span style="text-align: justify;">இது ஒரு வகையான பாக்டீரியா. உணவுப் பொருட்கள், தண்ணீர் மற்றும் மூச்சுக் காற்று மூலமாகவும் பரவலாம். <span style="text-align: justify;">இரைப்பை மற்றும் சிறுகுடலின் ஆரம்பப் பகுதியான ‘டியோடினம் ‘என்ற பகுதியில்தான் அல்சர் உருவாகும். <span style="text-align: justify;">இந்த வகை வயிற்றுப் புண்ணுக்கு ‘பெப்டிக் அல்சர்’ என்று பெயர். நாம் உண்ணும் உணவு இரைப்பைக்கு சென்று அமிலங்களால் சூழப்பட்டு தாக்குதல் நடத்தும். <span style="text-align: justify;">தொட்டால் விரல் வெந்து விடும் அளவுக்கு வீரியமான அமிலம் என்றாலும், இரைப்பையின் சுவர்கள் வலுவாக இருப்பதால், அமிலங்களால் ஒன்றும் செய்ய முடியாது.</span></span></span></span></span></p> <p style="text-align: justify;">ஆனால், இரைப் பையில் சுரக்கக் கூடிய அமிலத்தின் அளவு அதிகமாகும்போது, இரைப்பையின் சுவர்கள் தாக்குப் பிடிக்க முடியாமல் பாதிப்புக்கு உள்ளாகும். இந்த இடத்தில் புண்கள் உருவாகி அல்சரில் கொண்டு விடும். <span style="text-align: justify;">வந்திருப்பது அல்சர்தானா? புண் எந்த அளவுக்கு பரவியிருக்கிறது? ஹெச் பைலோரை கிருமித்தொற்று இருக்கிறதா?’ என்பதையெல்லாம் எண்டோஸ்கோபி பரிசோதனை மூலம் கண்டு பிடித்துவிடலாம். <span style="text-align: justify;">முன்குடலில் அடைப்பு ஏற்படுதல், குடலில் ஓட்டை விழுதல், ரத்தவாந்தி போன்ற பிரச்னைகளுக்கு மருத்துவ ரீதியாகவும், எண்டோஸ்கோபி மூலமாகவும் சிகிச்சை அளிக்கலாம். <span style="text-align: justify;">எண்டோஸ் கோபி சிகிச்சை அளித்தும் சரியாகவில்லையெனில், அறுவை சிகிச்சைதான் ஒரே தீர்வு.</span></span></span></p> <p style="text-align: justify;">வயிற்றில் புண் வந்து ஆறும்போது, அது தழும்பாக மாறும். இதனால், முன்குடலில் அடைப்பு ஏற்பட்டுவிடும். சாப்பிட்ட உணவும் இரைப்பையைவிட்டு முன் குடலுக்கு போகாது. <span style="text-align: justify;">எப்போதும் வயிறு ‘திம்’என்று இருக்கும். இதை சிலர், ‘சாப்பிட்ட உணவு செரிமானம் ஆகவில்லை. வாயுத் தொல்லையாக இருக்குமோ?’ என்று நினைப்பார்கள். <span style="text-align: justify;">இப்படி அடைப்பு ஏற்படும் போதெல்லாம் வாந்தியுடன் கூடிய புளித்த ஏப்பம் வரும். பொதுவாக நாம் உட்கொள்ளும் உணவு இரண்டரை முதல் நான்கு மணி நேரத்துக்குள் சிறு குடலுக்கு போய் விடும். <span style="text-align: justify;">ஆனால், அடைப்பு இருப்பவர்களுக்கு உணவு சிறுகுடலுக்கு போகாமல் இரைப்பையிலேயே தங்கி விடும். இதனால், வயிற்று எரிச்சல் மேலும் அதிகமாகும்.</span></span></span></p> <p style="text-align: justify;">வயிற்றில் உள்ள புண்ணும் அதிகமாகி, வாந்தி எடுக்கும்போது ரத்தம் கலந்து வரும். சமயங்களில் குடல் புண்ணில் ஓட்டையும் ஏற்படலாம். <span style="text-align: justify;">அல்சர் ஆயுட்கால வியாதி அல்ல. பழக்க வழக்கங்கள், உணவுக் கட்டுப்பாடுகளை கடைபிடித்தால் இரண்டே வாரத்தில் முற்றிலும் குணமாக்கிவிட முடியும். <span style="text-align: justify;">அல்சரால் பாதிக்கப்பட்டவர்கள், காரம், புளிப்பு, எண்ணெய் போன்ற அதிகமாக அமிலம் சுரக்கும் உணவுகளைத் தவிர்த்தால் அல்சரை அறவே ஒழித்து விடலாம்.</span></span></p> <h3 style="text-align: justify;">அல்சரைக் குணப்படுத்தும் அற்புதமான உணவு ரெசிபிகள்</h3> <h4 style="text-align: justify;">கடுகு-தேங்காய் பச்சடி</h4> <p style="text-align: justify;"><strong>தேவையானவை</strong></p> <p style="text-align: justify;">கடுகு – ஒரு டேபிள்ஸ்பூன் (10 கிராம்)</p> <p style="text-align: justify;">தேங்காய் துருவல் – அரை மூடி (100 கிராம்)</p> <p style="text-align: justify;">தயிர் – ஒரு கப் (100 மில்லி)</p> <p style="text-align: justify;">சுக்குப்பொடி – ஒரு சிட்டிகை</p> <p style="text-align: justify;">சின்ன வெங்காயம் – 2, உப்பு – ஒரு சிட்டிகை</p> <p style="text-align: justify;"><strong>செய்முறை</strong></p> <p style="text-align: justify;">வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி லேசாக வதக்கவும். இதனுடன் தேங்காய் துருவல், கடுகு, சுக்குப் பொடி சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.</p> <p style="text-align: justify;">இந்த விழுதில், நன்றாக அடித்த தயிரைச் சேர்த்து, தேவையான உப்பு போட்டு கலக்கவும். இதை வெறுமனே சாப்பிடலாம். இட்லி, சப்பாத்தி போன்ற உணவுகளுடன் சேர்த்தும் சாப்பிடலாம்.</p> <h4 style="text-align: justify;">வெஜிடபிள் அவியல் கூட்டு</h4> <p style="text-align: justify;"><strong>தேவையானவை</strong></p> <p style="text-align: justify;">பொடியாக நறுக்கி கேரட், சௌசௌ, சுரைககாய், உருளைக்கிழங்கு, வெங்காயம் சேர்ந்தது – ஒரு கப், தயிர் – அரை கப் (50 மில்லி), சர்க்கரை – ஒரு டீஸ்பூன் (5 கிராம்), தேங்காய் – கால் கப் (25 கிராம்), பயத்தம் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, தேங்காய் எண்ணெய் – 5 மில்லி.</p> <p style="text-align: justify;"><strong>செய்முறை</strong></p> <p style="text-align: justify;">வெங்காயத்தைத் தவிர மற்ற காய்கறிகளை சர்க்கரை சேர்த்து, தண்ணீர் விட்டு நன்றாக வேக வைக்கவும். <span style="text-align: justify;">தேங்காயை அரைத்துக் கொள்ளவும். பயத்தம்பருப்பை வேக வைத்துக் கொள்ளவும் கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். நன்றாக வதங்கியதும், வேக வைத்த காய்கறி கலவையைப் போட்டுக் கொதிக்க விடவும். <span style="text-align: justify;">அரைத்த தேங்காயைச் சேர்த்து, கொதித்ததும் பருப்பு, உப்பு சேர்த்து இறக்கவும். கடைசியில் தயிர் சேர்த்துக் கிளறவும். <span style="text-align: justify;">இதை சாதத்துடன் சேர்த்துக்கொள்ளலாம். டிபன் அயிட்டங்களுடனும் சேர்த்துச் சாப்பிடலாம்.</span></span></span></p> <p style="text-align: justify;">இரண்டு ரெசிபியிலுமே தயிர் மற்றும் தேங்காய் சேர்க்கப்பட்டிருப்பதால், உடலில் நன்மை செய்யும் பாக்டீரியா வளர்வதற்கு உதவியாக இருக்கும். வீரியமிக்க புண்களையும் ஆற்றக்கூடிய அருமருந்தான தேங்காய் எண்ணெயும் சேர்க்கப்படுவதால், வயிற்று எரிச்சல் குணமாகும். <span style="text-align: justify;">கடுகு சேர்த்திருப்பதால், புரதம், கால்ஷியம், பாஸ்பரஸ் போன்ற தாது உப்புகளும் கிடைத்துவிடும். உணவு எளிதாக ஜீரணமும் ஆகிவிடும்.</span></p> <p style="text-align: justify;">ஆதாரம்: விதை2விருட்சம்</p> </div>