<div id="MiddleColumn_internal"> <h3 style="text-align: justify;">அறிமுகம்</h3> <p style="text-align: justify;">சுகாதார முறையில் புழு வளர்ப்பதற்கும், அதிக பட்டுக் கூடு மகசூலுக்கும் கிருமி நீக்கம் மிகவும் அவசியமான ஒன்றாகும். உகந்த கிருமி நாசினி கொண்டு சரியான அளவு மற்றும் முறையில், தகுந்த நேரத்தில் கிருமி நீக்கம் செய்யும் பொழுது பட்டுப்புழுவைத் தாக்கக்கூடிய பாக்டீரியா, வைரஸ், பூசண மற்றும் புரோடோசோவா நோய்கிருமிகள் அழிகின்றன. ஒவ்வொரு முறையும் புழு வளர்ப்பிற்கு முன்னர் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான ஒரு செயல், கிருமி நீக்கம் செய்வதாகும். ஏனெனில் பட்டுப்புழு வளர்ப்பில் நோய் காத்தலைக் காட்டிலும் தடுப்பு முறையே உகந்ததாகும்</p> <h3 style="text-align: justify;">கிருமி தடுப்பு முறைகள்</h3> <ol style="text-align: justify;"> <li>இயற்கை முறை : பட்டுப்புழு வளர்க்கப் பயன்படும் உபகரணங்களை வெயிலில் காய வைத்தல், நோய் வாய்ப்பட்ட புழுக்களை எரித்தல் மற்றும் புதைத்தல்</li> <li>வேதியியல் முறை : பல வகையான மருந்துகளைப் பயன்படுத்துதல். இவைகளை கிருமி நாசினிகள் எனக் குறிப்பிடுகிறோம். இவற்றினை வளர்ப்பு அறை, உபகரணங்களுக்கு பயன்படுத்தும் கிருமி நாசினிகள் மற்றும் படுக்கை கிருமி நாசினிகள் என இரண்டு வகைப்படுத்துகிறோம்.</li> </ol> <h3>கிருமி நாசினிகள் தேவைப்படும் அளவு, தயாரிக்கும் முறை மற்றும் கணக்கிடும் முறை</h3> <ul> <li style="text-align: justify;">அளவு : கிருமி நாசினிகளைத் துாளாகப் பயன்படுத்தும் பொழுது 200 கிராம் / சதுர மீட்டர் என்ற அளவிலும் திரவ வடிவில் பயன்படுத்தும் பொழுது, 2 லிட்டர் / சதுர மீட்டர் என்ற அளவிலும் தேவைப்படுகிறது. இவற்றினை வளர்ப்பறைத் தளம், சுவர், வளர்ப்பறையின் வெளிப்புறம் மற்றும் பட்டுப்புழு வளர்ப்பு உபகரணங்கள் ஆகியவை நன்கு நனையும் படி தெளிக்க வேண்டும்.</li> <li style="text-align: justify;">தயாரிக்கும் முறை : ஒவ்வொரு மருந்திற்கும் தயாரிக்கும் முறை வேறுபடுகிறது.</li> <li style="text-align: justify;">கணக்கிடும் முறை : உதாரணத்திற்கு 20 மீ x 15 மீ அளவு கொண்ட ஒரு புழு வளர்ப்பறைக்கு கிருமி நாசினியின் அளவைக் கண்டறியும் முறை கீழே வருமாறு.</li> <li style="text-align: justify;">தள் அளவு - நீளம் x அகலம் - 20 மீ x 15 மீ x 2 = 600 சதுர மீட்டர். சுவர் அளவு - நீளம் X உயரம் - 20 மீ x 10 மீ x 2 = 400 சதுர மீட்டர் மொத்த அளவு - 600 சதுர மீட்டர் + 400 சதுர மீட்டர் 1000 சதுர மீட்டர்</li> <li style="text-align: justify;">மருந்து தேவைப்படும் அளவு = 1000 x 2 = 2000 லிட்டர் ( 2 லி / சதுர மீட்டர்)</li> <li style="text-align: justify;">இத்துடன் பட்டுப்புழு உபகரணங்களுக்கு 25 சதம் என்ற அளவிலும் (500 லிட்டர்) வளர்ப்பறையின் வெளிப்புறத்திற்கு 10 சதமும் (200 லி) தேவைப்படுகிறது.</li> <li style="text-align: justify;">கிருமிநாசினியின் மொத்த தேவை = 2000 லி + 500 லி + 200 லி = 2700 லிட்டர்.</li> </ul> <h3>கிருமி நாசினிகளின் அளவும், தயாரிக்கும் முறையும்</h3> <p style="text-align: justify;">பல்வேறு வகையான கிருமி நாசினிகள் தற்பொழுது பயன்படுத்தப்படுகிறது.</p> <p style="text-align: justify;">அ) <strong>பார்மலின் : </strong>இது திரவ வடிவில் 36 சத பார்மால்டிஹைட் ஆக கிடைக்கிறது. திறந்த வெளி வளர்ப்பகங்களுக்கு இது பொருந்தாது. பார்மலின் கலவை : 2% பார்மலின் + 0.05% சோப்புத்தூள். 150 லி பார்மலின் (2700 லி - 18), 1.0 கிலோ சோப்புத்தூள் (0.5 x 2000 கிராம்) மற்றும் 2550 லிட்டர் (2700 லி - 150 லி) தண்ணீர் தேவைப்படுகிறது.</p> <p style="text-align: justify;">ஆ) <strong>பிளீச்சிங் பவுடர் :</strong> இது 30 சத க்ளோரின் மருந்து கொண்ட காரத் தன்மையுடைய வெள்ளை நிறத்தூளாகக் கிடைக்கிறது. பிளீச்சிங் பவுடர் கலவை : 2% பிளீச்சிங் பவுடர் + 0.3% நீர்த்த சுண்ணாம்பு நீர். 54 கிலோ பிளீச்சிங் பவுடர் (20 கிராம் x 2700 லி) 8.10 கிலோ நீர்த்த சுண்ணாம்பு (3 கிராம் x 2700 லி) ஆகிய இரண்டையும் 2700 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவும் (முதலில், இவைகளை குறைந்த அளவு நீரில் ஒரு பசை போல் செய்து கொண்டு பின்னர் குறிப்பிட்ட அளவு தண்ணீரில் கலக்க வேண்டும்).</p> <p style="text-align: justify;">இ) க்ளோரின் டை ஆக்ஸைட் சானிடெக் என்ற பெயரில் கிடைக்கிறது.</p> <p style="text-align: justify;"><strong>சானிடெக் கலவை :</strong> 2.5% சானிடெக் மருந்து + 0.5% நீர்த்த சுண்ணாம்பு + 0.25% ஊக்குவிக்கி (சானிடெக் மருந்துடன் கிடைக்கிறது). 1லிட்டர் சானிடெக் மருந்து தயாரிக்க 25 மில்லி சானிடெக் மருந்து, 2.5 கிராம் ஊக்குவிக்கி மற்றும் 5 கிராம் நீர்த்த சுண்ணாம்பு தேவைப்படுகிறது. 2700 லிட்டர் மருந்திற்கு முதலில் இரண்டு வகையான கலவைகளைத் தயார் செய்தல் அவசியம்.</p> <p style="text-align: justify;">கலவை 'அ' : 6.75 கிலோ (2700 லி x 2.5 கிராம்) ஊக்குவிக்கியுடன், 67.5 லி (2700 லி x 25 மில்லி) சானிடெக் மருந்தினை கலக்கி 5 நிமிடம் வைக்க வேண்டும். இது மஞ்சள் திரவமாக மாறும்.</p> <p style="text-align: justify;">கலவை 'ஆ' : 13.5 கி (2700 லி x 5 கிராம்) நீர்த்த சுண்ணாம்பை 2632.5 லி தண்ணீ ரில் (2700 லி - 67.5 லி) கலக்க வேண்டும்.</p> <p style="text-align: justify;">(குறைந்த நீரில் முதலில் பசை போல் செய்து, பின்னர் குறிப்பிட்ட அளவு நீரில் கலக்க வேண்டும்). 'அ' கலவையை 'ஆ' கலவையுடன் கலந்து பயன்படுத்த வேண்டும்.</p> <p style="text-align: justify;"><strong>ஈ) 5% பிளீச்சிங் பவுடர்</strong></p> <p style="text-align: justify;">50 கிராம் பிளீச்சிங் பவுடர் மருந்தினை 1 கிலோ சுண்ணாம்புடன் கலந்து 200 கிராம் / சதுர மீட்டர் என்ற அளவில் வளர்ப்பறையின் வெளிப்புறத்திலும், நடைபாதையிலும் தூவ வேண்டும்.</p> <h3>படுக்கை கிருமி நாசினிகள்</h3> <p style="text-align: justify;">நோய் கிருமிகள் பரவுதலைத் தடுக்கும் பொருட்டு புழுக்களின் மீது தோல் உரித்த அரை மணி நேரத்திற்குப் பின்னர் பயன்படுத்த வேண்டும். படுக்கைக் கிருமி நாசினிகளில் சுண்ணாம்பு அதிக அளவில் இருப்பதினால் ஈரப்பதத்தைக் குறைக்கும் திறனும் பெற்றுள்ளது. 100 முட்டைத் தொகுதிகளுக்கு, 4 கிலோ என்ற அளவில் முதல், இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் தோலுரிப்பிற்குப் பின்னரும், ஐந்தாம் பருவப்புழுக்களின் நான்காவது நாளிலும் பயன்படுத்த வேண்டும்.</p> <p style="text-align: justify;">தற்பொழுது உபயோகத்திலுள்ள சிறப்பு குணம் வாய்ந்த படுக்கை கிருமி நாசினிகள் பின் வருமாறு:</p> <p style="text-align: justify;">சுரக்ஷா (பூசண நோய் படுக்கை கிருமி நாசினி), சஞ்சீவினி (பாக்டீரியா மற்றும் பால் நோய்களுக்கு உகந்தது), விஜிதா (எல்லா வித நோய்களுக்கும் சிறந்தது), அங்குஷ் (தாவிர படுக்கைக் கிருமி நாசினி) மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் சக்தி செரித்தூள் (எல்லா வித நோய்களுக்கும் உகந்தது).</p> <h3>கிருமி நாசினிகளை எப்போது பயன்படுத்துவது</h3> <p style="text-align: justify;">புழுக்கள் முட்டையிலிருந்து பொரிக்க ஐந்து நாட்கள் இருக்கும் பொழுது, வளர்ப்பறையை நீர் கொண்டு சுத்தமாக கழுவவேண்டும். பார்மலின் அல்லது சானிடெக் மருந்தினை வளர்ப்பறை மற்றும் உபகரணங்களில் நன்றாக தெளிக்க வேண்டும். நான்கு நாட்களுக்கு முன்னர், உபகரணங்களை வெயிலில் காயவைத்து சுண்ணாம்பு நீரை ( 3கி. / லிட்டர்) தெளிக்க வேண்டும். மூன்று நாட்களுக்கு முன்னர், மீண்டும் சானிடெக் அல்லது பார்மலின் அல்லது பிளீச்சிங் பவுடர் மருந்து கொண்டு கிருமி நீக்கம் செய்து, 24 மணி நேரத்திற்கு வளர்ப்பறையை மூடி வைக்க வேண்டும். இரண்டு நாட்களுக்கு முன்னர், 5 சத பிளீச்சிங் பவுடர் மருந்தினை நடைபாதையில் தூவ வேண்டும். ஜன்னல்களைத் திறந்து தகுந்த காற்றோட்டத்தை ஏற்படுத்த வேண்டும். ஒரு நாள் முன்னர், இளம்புழு வளர்ப்பிற்கு தேவையானவைகளைச் செய்ய வேண்டும்.</p> <h3>தகுந்த சுகாதாரம் அமையக் கருத்தில் கொள்ள வேண்டியவை</h3> <ul style="text-align: justify;"> <li>பிறரிடம் இருந்து உபகரணங்களைக் கடன் வாங்கக் கூடாது.</li> <li>வளர்ப்பறைக்குள் நுழைபவர்கள் 2 சத பிளீச்சிங் பவுடர் மற்றும் 0.3 சத நீர்த்த சுண்ணாம்பு கரைசலில் முக்கிய பாத்தியின் மீது கால் பதிக்க வேண்டும்.</li> <li>புழு வளர்ப்பில் ஈடுபடுவோர் தங்கள் கைகளை 2 சத பிளீச்சிங் பவுடர் மருந்தில் நன்கு கழுவி கொள்ளுதல் வேண்டும்.</li> <li>நோய்வாய்ப்பட்ட புழுக்களை சேகரித்து பிளீச்சிங் பவுடர் கரைசலில் போட்டு அப்புறப்படுத்த வேண்டும் (2% பிளீச்சிங் பவுடர் + 0.3% நீர்த்த சுண்ணாம்பு நீர்).</li> <li>படுக்கை அறையைச் சுத்தம் செய்ய பயன்படுத்தும் வலைகளை 2 சதம் பிளீச்சிங் பவுடர் கரைசலில் 10 நிமிடம் வரை ஊற வைத்து சுத்தம் செய்ய வேண்டும்.</li> <li>0.3 சத நீர்த்த சுண்ணாம்பு கரைசல் கொண்டு கிருமி நீக்கம் செய்த வினைல் தாள்களைக் கொண்டு கழிவுகளை அகற்ற வேண்டும்.</li> <li>படுக்கை அறையை சுத்தம் செய்த பின்னர், நிலத்தை 2 சத பிளீச்சிங் பவுடர் கரைசல் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.</li> </ul> <h3 style="text-align: justify;">கேள்வி பதில்கள்</h3> <p style="text-align: justify;"><strong>அரசால் வழங்கப்படும் பட்டுபூச்சி வளர்ப்பு பயிற்சி விவசாயிகளுக்கு எந்தளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது?</strong></p> <p style="text-align: justify;">பட்டுபூச்சி வளர்ப்பு பயிற்சி நிறுவனம், கீழ்கண்ட முக்கயத்துவம் வாய்ந்த பட்டுபூச்சி வளர்ப்பு பயிற்சியை விவசாயிகளுக்கு வழங்குகிறது.</p> <ul style="text-align: justify;"> <li>உள்ளூர் விதை வளர்ப்பு பயிற்சி</li> <li>இருசந்ததி விதை வளர்ப்பு பயிற்சி</li> <li>இளம் புழுக்கள் வளர்ப்பு பயிற்சி</li> <li>பல்வேறு திட்டங்களின் கீழ் விவசாயிகளின் பயிற்சி</li> <li>ஒரு நாள் செறிவூட்டப்பட்ட பயிற்சி</li> </ul> <p style="text-align: justify;"><strong>தமிழ்நாட்டில் இளம் பட்டுபுழு வளர்ப்பு மையங்கள் எத்தனை உள்ளன?</strong></p> <p style="text-align: justify;">25 இளம்பட்டு புழு வளர்ப்பு மையங்கள் செயல்படுகின்றன.</p> <p style="text-align: justify;"><strong>விவசாயிகளுக்கு தொழில்நுட்ப அறிவுரைகளை யார் வழங்குகிறார்கள்?</strong></p> <p style="text-align: justify;">விவசாயிகளுக்கு பட்டுபூச்சி வளர்ப்பு சம்மந்தமாக தொழில்நுட்ப அறிவுரைகளை பட்டுபூச்சி வளர்ப்பு விரிவாக்க அலுவலர்கள் வழங்குகிறார்கள்.</p> <p style="text-align: justify;"><strong>வளர்க்கப்பட்ட பட்டுகூட்டை யாரிடம் விற்பனை செய்யலாம்?</strong></p> <p style="text-align: justify;">முசுக்கொட்டை வளாப்பு கூட்டுறவு அமைப்பானது நேரிடையாக விவசாயிகளிடமிருந்து பட்டுக்கூட்டை கொள்முதல் செய்கிறது. உடனடியாக பணமும் செலுத்துகிறது.</p> <p style="text-align: justify;">ஆதாரம்: பட்டுப்புழுவியல் துறை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்</p> </div>