<div id="MiddleColumn_internal"> <h3>மணிலா சாகுபடி</h3> <p style="text-align: justify;">நெல்லுக்கு அடுத்தபடியாக அதிகம் பயிரிடப்படும் பயிர் மணிலா. ஆடி மாதத்தில், மானாவாரி பயிராக மணிலா சாகுபடி செய்யப்படும். மேலும் கிணற்றுப் பாசனத்தில் கார்த்திகை, மார்கழி மாதத்தில் இறைவைப் பயிராகவும் மணிலாவை சாகுபடி செய்யலாம்.</p> <p style="text-align: justify;">இந்த இறைவையில் பயிரிடப்பட்டுள்ள மணிலா செடிக்கு ஊட்டச்சத்து கரைசலைத் தெளிப்பதன் மூலம் அதிக மகசூலை பெற முடியும்</p> <h3>ஊட்டச்சத்து கரைசல்</h3> <p style="text-align: justify;"><strong>(i) தயாரிக்கும் முறை</strong></p> <p style="text-align: justify;">டி.ஏ.பி. உரம் ஒரு கிலோ, அமோனியம் சல்பேட் 400 கிராம், போரக்ஸ் (வெண்காரம்) 200 கிராம் ஆகியவற்றை 15 லிட்டர் தண்ணீரில் ஒன்றாகக் கலந்து ஒரு இரவு முழுவதும் வைத்திருக்க வேண்டும். மறுநாள் காலையில் இக் கலவையை வடிகட்டினால், 13 லிட்டர் வரை தெளிந்த ஊட்டச்சத்துக் கரைசல் கிடைக்கும். இதை 187 லிட்டர் தண்ணீருடன் சேர்த்து 200 லிட்டர் என்ற அளவில் கரைசலை தயார் செய்ய வேண்டும். இந்த கரைசலை விதைத்து 25 நாளில் ஒரு முறையும், 10 நாள் இடைவெளிவிட்டு 35-ம் நாள் ஒரு முறையும் செடிகளில் தெளிக்க வேண்டும்.</p> <p style="text-align: justify;">இதேபோல் மணிலாவுக்கு வளர்ச்சி பருவத்தில் ஒரு ஏக்கருக்கு 160 கிலோ ஜிப்சம் இட வேண்டும். இதில் 80 கிலோவை அடியுரமாகவும் இடலாம். பின்னர் பயிர் வளர்ச்சிப் பருவத்தில் 40 முதல் 45 நாள்களில் 2-வது களை எடுக்கும் தருணத்தில் 80 கிலோ ஜிப்சம் இட்டு நன்றாக கொத்தி மண் அணைப்பதன் மூலம் மணிலா செடியில் காய்ப்பிடிப்புத் திறன் அதிகரிக்கும்.</p> <h3>ஊட்டச்சத்து கரைசலின் பயன்கள்</h3> <ul> <li style="text-align: justify;">ஊட்டச்சத்து கரைசல் தெளித்தால் வேர்கடலையில் 20 சதவீதம் கூடுதல் விளைச்சலை பெறலாம்</li> <li style="text-align: justify;">வேர்கடலை விதைத்த 25 முதல் 35 நாட்களில், ஊட்டச்சத்து கரைசல் தெளிக்க வேண்டும்.</li> <li style="text-align: justify;">இதனால் 20 சதவீதம் கூடுதல் மகசூல் கிடைக்கும்.</li> <li style="text-align: justify;">ஏக்கருக்கு ஒரு கிலோ டி.ஏ.பி.,யுடன், 200 கிராம் போரக்சை 10 லிட்டர் நீரில் ஊற வைத்து மறு நாள் மாலையில் கரைசலை வடிகட்ட வேண்டும்.</li> <li style="text-align: justify;">பின்னர் 190 லிட்டர் நீர் கரைசலில், 400 கிராம் அமோனியம் சல்பேட் உரத்தையும், 180 மில்லி பிளானோபிக்ஸ் மருந்தை கலந்தும் கரைசலை தயாரிக்க வேண்டும்.</li> <li style="text-align: justify;">மண்ணில் ஈரப்பதம் இருக்கும் போது, மாலை நேரத்தில் கைத்தெளிப்பான் மூலம் தெளித்தால், விழுதுகள் பூமிக்குள் எளிதாக இறங்கி, திரட்சியான வேர்கடலைகள் உருவாகும்.</li> <li style="text-align: justify;">இதனை 15 நாட்கள் இடைவெளியில் மீண்டும் ஒரு முறை தெளிக்க வேண்டும். இவ்வாறு ஊட்டச்சத்து கரைசலை தெளிப்பதால் விவசாயிகளுக்கு கூடுதல் மகசூல் கிடைக்கும்.</li> </ul> <h3>பூச்சிகளை கட்டுப்படுத்த</h3> <p style="text-align: justify;">மணிலாவில் சுருள் பூச்சி மற்றும் புரூடினியா அதிகம் தாக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. சுருள் பூச்சியைக் கட்டுப்படுத்த விதை விதைப்பின்போது எட்டு வரிசைக்கு ஓர் வரிசை கம்பு விதைப்பு செய்ய வேண்டும். புருட்டீனியாவை கட்டுப்படுத்த வரப்பு ஓரங்களில் ஆமணக்கு சாகுபடி செய்வது சிறந்தது.</p> <p style="text-align: justify;">ஆதாரம்: வேளாண்மைத் துறை கரூர்</p> </div>