<div id="MiddleColumn_internal"> <h3>கேழ்வரகு சாகுபடியில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை</h3> <ol> <li style="text-align: justify;">ஒரு ஹெக்டேர் நிலத்தில் அடியுரமாக 12.5 டன் மக்கிய தொழு உரத்தை கடைசி உழவின்போது பரப்பியப் பிறகு நிலத்தை உழ வேண்டும்.</li> <li style="text-align: justify;">ஒரு ஹெக்டேருக்கு 10 பாக்கெட் (2 கிலோ) அசோஸ்பைரில்லம், 20 பாக்கெட் (4 கிலோ) அசோபாûஸ 25 கிலோ மணல், 25 கிலோ தொழு உரம் கலந்து தூவ வேண்டும்.</li> <li style="text-align: justify;">மண் பரிசோதனைக்கு ஏற்ப உரமிடுதல் வேண்டும். மண் பரிசோதனை செய்யாவிட்டாலும் பின்வரும் அளவில் உரமிடலாம்.</li> <li style="text-align: justify;">ரசாயன உரங்களான தழை, மணி, சாம்பல் சத்து ஹெக்டேருக்கு 60:30:30 கிலோ என்றளவில் பரிந்துரை செய்யப்படுகிறது.</li> <li style="text-align: justify;">இதில் பாதியளவு தழைச்சத்தை மேலுரமாக இடவும். நுண்ணூட்டச் சத்துக் கலவையை 12.5 கிலோ என்ற அளவில் மணலுடன் கலந்து நிலத்தின் மேல் சீராகத் தூவ வேண்டும்.</li> <li style="text-align: justify;">தூவப்பட்ட உரத்தை நிலத்துடன் கலக்கக் கூடாது.</li> <li style="text-align: justify;">நீர் நிர்வாகம்: நாற்று நடும்போது ஒரு நீர்ப் பாசனமும் பின்பு 4-ஆம் நாள் ஒரு பாசனமும், பிறகு வாரம் ஒருமுறை நீர்ப் பாசனமும் கொடுக்க வேண்டும்.</li> <li style="text-align: justify;">கேழ்வரகு பயிரைத் தாக்கும் பூச்சிகள்: இளஞ்சிவப்பு தண்டு துளைப்பான், இலைச் சுருள்களில் புழுக்கள் தங்கி நடு இலைகளை உண்ணுவதால் துவாரங்கள் ஏற்படும்.</li> <li style="text-align: justify;">அடி இலைகள் பச்சையாக இருந்தாலும், நடுக்குருத்து மட்டும் பழுப்பு நிறமாக மாறி பிறகு காய்ந்து விடும். துளையிடப்பட்ட துவாரங்களில் பூச்சிகளின் கழிவுகள் அடைத்துக் கொண்டிருக்கும் கதிர் வெளிவரும் பருவத்தில் வெண்கதிர் அறிகுறித் தோன்றும். கதிர் மணிகள் நிரம்பாமல் வெள்ளை நிறத்தில் தெளிவாகத் தெரியும்.</li> <li style="text-align: justify;">கட்டுப்படுத்தும் முறைகள்: பூச்சித் தாக்கத்தின் தொடக்கத்திலேயே காய்ந்த குருத்துக்களை பிடுங்கி அழித்துவிட வேண்டும்.</li> <li style="text-align: justify;">குறுகிய கால தானிய வகையல்லாத பயிர்களுடன் பயிர் சுழற்சி முறையை கையாள வேண்டும். சரியான அளவு தழைச் சத்து உரங்களை முறையாகப் பகிர்ந்தளிக்க வேண்டும்.</li> <li style="text-align: justify;">விளக்குப்பொறி, இனக் கவர்ச்சிப் பொறியை வைக்க வேண்டும். உயிரியல் முறை கட்டுப்பாட்டு காரணிகளான டிரைகோகிராமா மைனூடம் (முட்டை ஒட்டுண்ணிகள்) போன்றவற்றை பயன்படுத்த வேண்டும்.</li> </ol> <h3 align="justify">கேள்வி பதில்கள்</h3> <p style="text-align: justify;"><strong>1. ராகி நடவு வயலுக்கான தழை, மணி மற்றும் சாம்பல் சத்து பரிந்துரை என்ன?</strong></p> <p style="text-align: justify;">மண் பரிசோதனையின் பரிந்துரைப்படி உரமிடவேண்டும். மண் சோதனை அளவுகள் இல்லையெனில், 50-60 கிலோ தழைச்சத்து, 30-40 கிலோ மணிச்சத்து மற்றும் 20-30 கிலோ சாம்பல் சத்து ஒரு எக்டருக்கு தேவைப்படுகிறது.</p> <p style="text-align: justify;"><strong>2. ராகி நாற்றுகளை நடுவதற்கு முன் நடவு வயலில் எவ்வளவு தொழு உரம் இடவேண்டும்?</strong></p> <p style="text-align: justify;">உழுவதற்கு முன் 12.5 டன்/எக்டர் தொழு உரம் (அ) மக்கிய தென்னை நார்க்கழிவை வயலில் பரப்பி, பிறகு உழுது மண்ணில் கலக்கி விடவும். (தொழு உரத்தை பரப்பியவுடன், அப்படியே மூடாமல் விட்டுவிடக் கூடாது. ஏன் எனில், சத்துக்களை இழக்க நேரிடும்.)</p> <p style="text-align: justify;"><strong>3. நடவு வயலில் எவ்வாறு உரமிட வேண்டும்?</strong></p> <p style="text-align: justify;">முழு அளவு சாம்பல் மற்றும் மணிச்சத்து, பாதியளவு தழைச்சத்து ஆகியவற்றை விதைப்பின் போது இடவேண்டும். விதைப்பின் போது உரங்கள் முழுவதையும் 8-10 செ.மீ ஆழத்தில் மண்ணில் இடவேண்டும்.</p> <p style="text-align: justify;">மீதமுள்ள பாதியளவு தழைச்சத்தை இரண்டாகப் பிரித்து, விதைத்த 30 மற்றும் 50 ஆம் நாளில் இடவும்.</p> <p style="text-align: justify;"><strong>4. ராகி நாற்றுகளை நடுவதற்கு முன் பரிந்துரைக்கப்படும் உயிர் உரங்கள் யாவை?</strong></p> <p style="text-align: justify;">நடுவதற்கு முன் 10 பாக்கெட்/எக்டர் (2000 கிராம்) அசோஸ்பைரில்லம் உயிர் உரத்தை, 25 கிலோ மண் மற்றும் 25 கிலோ தொழு உரத்துடன் கலந்து இடவும்.</p> <p style="text-align: justify;">2 டன் ஊட்டமேற்றப்பட்ட தொழு உரத்துடன், 100% மணிசத்து மற்றும் சாம்பல் சத்து உரம் கலந்து இட்டதில் கோயமுத்துாரில் அதிக மகசூல் பெற்றுள்ளனர்.</p> <p style="text-align: justify;"><strong>5. ராகி பயிருக்கு எவ்வளவு நுண்ணுாட்டம் இட வேண்டும்? எவ்வாறு இட வேண்டும்?</strong></p> <p style="text-align: justify;">12.5 கிலோ நுண்ணுாட்டக் கலவையை போதுமான அளவு மணலுடன் கலந்து 50 கிலோ/எக்டர் வருமாறு ஆக்கிக் கொள்ளவும்.</p> <p style="text-align: justify;">கலவையை படுக்கைகளின் மேல் சீராக பரப்பவும். மண்ணில் உள்ளே புதைத்து விடாமல் பார்த்துக் கொள்ளவும்.</p> <p style="text-align: justify;"><strong>6. அசோஸ்பைரில்லத்தை ராகி பயிருக்கு எவ்வாறு, எப்பொழுது இடவேண்டும்?</strong></p> <p style="text-align: justify;">நடவின்போது, 5 பாக்கெட் (1000 கிராம்)/எக்டர் அசோஸ்பைரில்லத்தை 40 லிட்டர் தண்ணீரில் கலந்து, நாற்றுகளின் வேர்களை, கரைசலில் 15-30 நிமிடம் நனைத்து பின் நடவும்.</p> <p align="justify">ஆதாரம்: <span style="text-align: justify;">வேளாண்மை அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம்</span></p> </div>