<div id="Middlecolumn_internal"> <h3 style="text-align: justify;">கரும்பு கரணைகள்</h3> <p style="text-align: justify;">சாதாரணமாக கரும்பு நடவின் போது 2 அல்லது 3 பரு உள்ள விதைக் கரணைகள் உபயோகிக்கப்படுகிறது. ஆனால், நவீன செம்மை சாகுபடி தொழில்நுட்பத்தில், ஒரு பரு கரணைகளை பயன்படுத்தி நிழல்வலைக் கூட நாற்றங்கால் அமைக்கப்படுகிறது.</p> <p style="text-align: justify;"><img class="image-inline" src="https://static.vikaspedia.in/media_vikaspedia/ta/images/agriculture/bb5bc7bb3bbeba3bcdbaebc8-baabafbbfbb0bcdb95bb3bcd/b9abb0bcdb95bcdb95bb0bc8baabcd-baabafbbfbb0bcdb95bb3bcd/b95bb0bc1baebcdbaabc1-b9abbeb95bc1baab9fbbf/nursery.jpg" width="513" height="342" /></p> <p style="text-align: justify;">கரணைகள் தெரிவுசெய்யப்பட்டு தேங்காய் நார்க் கழிவு உதவியோடு இதற்கென உள்ள பிளாஸ்டிக் ட்ரேயில் வளர்க்கப்படுகின்றன. இவ்வாறு நாற்றங்கால் அமைப்பதன் மூலம் அதிக அளவு முளைப்புத் திறனை குறைந்த நாள்களிலேயே அடைய முடியும்.</p> <p style="text-align: justify;">சாதாரண முறையில் நிலத்தில் வளர்க்கப்படும் கரும்பு கரணைகளில் 2 மாதத்தில் ஏற்படும் வளர்ச்சி இம்முறையில் ஒரு மாதத்தில் பெறப்படுகிறது.</p> <h3 style="text-align: justify;">நாற்றுகள் நடவு செய்தல்</h3> <p style="text-align: justify;">நாற்றுகளை 25 முதல் 30 நாள்களுக்குள் நடவேண்டும். பார்கள் 4 அடி இடைவெளியில் அமைக்கப்பட வேண்டும். ஒரு ஏக்கர் நடவு செய்ய 5,450 நாற்றுகள் தேவைப்படும். 5 அடி இடைவெளி பார் என்றால் 4,350 நாற்றுகள் என கணக்கிட்டு நடவு செய்யவேண்டும். நாற்று நடவுக்கு ஒரு நாள் முன்பு நாற்றுகளுக்கு தண்ணீர் விடுவதை நிறுத்த வேண்டும். நாற்று நடும்போது இயற்கை உரம் அல்லது டிஏபி இடவேண்டும்.</p> <h3 style="text-align: justify;">உரம் இடுதல்</h3> <p style="text-align: justify;">ஒவ்வொரு நிலத்திலும் அந்த மண்ணிலுள்ள சத்துகளின் அளவை மண்ணாய்வு செய்து அதற்கேற்றவாறு உரம் இடவேண்டும். அல்லது ஒரு ஏக்கருக்கு 110 கிலோ தழைச்சத்து, 25 கிலோ மணிச்சத்து, 45 கிலோ சாம்பல் சத்து இட வேண்டும்</p> <p style="text-align: justify;">ஆதாரம்: கரும்பு ஆராய்ச்சி நிலையம், சிறுகமணி</p> </div>