<div id="MiddleColumn_internal"> <h3>அறிமுகம்</h3> <p style="text-align: justify;">பயறு வகை சாகுபடி பரப்பளவு தற்போது குறைந்து கொண்டே வருகிறது. அதே வேளையில், பயறு வகைகளின் தேவை மக்கள்தொகைக்கு ஏற்ப அதிகரித்துக்கொண்டே உள்ளது. இந்த நிலையில், நாம் குறைவான சாகுபடி பரப்பில் அதிக மகசூல் எடுக்க மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களைக் கையாள வேண்டும்</p> <h3>வரப்பு பயிர் மற்றும் ஊடு பயிர்</h3> <p style="text-align: justify;">பயறு வகைகளின் உற்பத்தியை அதிகரிக்க, அதன் சாகுபடிப் பரப்பை கண்டிப்பாக அதிகரிக்க வேண்டும். சாகுபடி பரப்பை அதிகரிக்க வேண்டுமெனில், மற்ற பயிர்கள் சாகுபடி செய்யும் போது அதில் பயறு வகை பயிர்களை வரப்புப் பயிராகவும், ஊடுபயிராகாவும் சாகுபடி செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது பயறு வகைப் பயிர்களின் உற்பத்தித் திறனையும் அதிகப்படுத்த முடியும்.</p> <p style="text-align: left;"><strong>நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட பருவத்துக்கேற்ற உயர் விளைச்சல் ரகங்களாவன</strong></p> <ul style="text-align: justify;"> <li>துவரை : கோ (ஆர்.ஜி), வம்பன்1, 2,3, கோ6, ஏ.பி.கே.1, பி.எஸ்.ஆர்.1, எல்.ஆர்.ஜி.41, ஜ.சி.பி.எல்.</li> <li>உளுந்து: வம்பன் 3, 4, 5, 6, 7,8, கோ6, ஆடுதுறை3,5, டி.எம்.வி.1.,ஏ.பி.கே.1,டி9</li> <li>பாசிப்பயறு: கோ6, கோ8, வம்பன்2, வம்பன்3, வி.ஆர்.எம்.(ஜிஜி)2,கோ7, ஆடுதுறை 3</li> <li>தட்டைப் பயிறு: கோ6, கோ(சிபி)7, வம்பன், வம்பன்2, கோ2, பையூர் 1</li> <li>கொள்ளு: பையூர்1, பையூர் 2</li> <li>அவரை: கோ12, கோ13, கோ 14</li> <li>மொச்சை: கோ1, கோ2 ஆகியவற்றை தேர்வு செய்யலாம்</li> </ul> <h3>விதைநேர்த்தி செய்து விதைத்தல்</h3> <ul style="text-align: justify;"> <li>ஒரு கிலோ விதைக்கு நான்கு கிராம் டிரைக்கோடெர்மா விரிடி அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் ஆகியவற்றில் ஒன்றை கொண்டு விதை நேர்த்தி செய்யாலாம்.</li> <li>ரசாயன விதை நேர்த்தி: ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பன்டாசிம் 50 டிபிள்யூ.ப்பி. கொண்டு விதை நேர்த்தி செய்யாலாம்.</li> <li>நுண்ணுயிர் விதை நேர்த்தி: தலா ஒரு பொட்டலம் (200 கிராம்) ரைசோபியம் (பயறு) மற்றும் பாஸ்போபாக்டீரியா நுண்ணுயிர் உரங்களை 200 மி.லி. ஆறிய அரிசிக் கஞ்சியில் கலந்து அவற்றில் ஓர் ஏக்கருக்குத் தேவையான பயறு விதைகளைக் கலந்து 15 நிமிடம் நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும். ஓர் ஏக்கருக்குப் பரிந்துரைக்கப்பட்ட விதையளவுடன் 50 மி.லி. மெத்தைலோ பாக்டீரியா திரவ நுண்ணுயிரியினைக் கலந்து 10 நிமிடம் நிழலில் உலர்த்தி விதைக்கவும்.</li> </ul> <h3>பயிர் எண்ணிக்கையைப் பராமரித்தல்</h3> <p style="text-align: justify;">வரிசைக்கு வரிசை 30. செ.மீ. இடைவெளியும் செடிக்குச் செடி 10. செ.மீ இடைவெளியும் இருக்குமாறு விதைக்க வேண்டும். பயிர் எண்ணிக்கை ஒரு சதுர மீட்டருக்கு 33 செடிகள் இருக்கலாம்.</p> <h3>ஒருங்கிணைந்த உர மேலாண்மை</h3> <ul style="text-align: justify;"> <li>அங்கக உரம்: ஏக்கர் ஒன்றுக்கு 5 டன் மக்கிய தொழு உரம் அல்லது கம்போஸ்ட் கடைசி உழவின்போது இட்டு உழவு செய்ய வேண்டும்.</li> <li>பயறு நுண்ணூட்டக் கலவை: ஏக்கர் ஒன்றுக்கு 2 கிலோ பயறு நுண்ணூட்டக்கலவையினைத் தேவையான அளவு மணலுடன் கலந்து விதைப்புக்கு முன் சீராக தூவ வேண்டும். நுண்ணூட்டக் கலவையினை அடியுரமாக இட்டு உழக் கூடாது.</li> </ul> <p style="text-align: justify;"><strong>நுண்ணுயிர் உரங்கள்</strong></p> <ul style="text-align: justify;"> <li>ஏக்கர் ஒன்றுக்கு தலா நான்கு பொட்டலங்கள் (800 கிராம்) ரைசோபியம் (பயறு) மற்றும் பாஸ்போபாக்டீரியா நுண்ணுயிர் உரங்களை தொழு உரத்துடன் கலந்து இட வேண்டும் அல்லது ஏக்கர் ஒன்றுக்கு தலா 200 மி.லி. ரைசோபியம் (பயறு) மற்றும் பாஸ்போபாக்டீரியா நுண்ணுயிரிகளை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து அதனை பத்து கிலோ நன்கு தூள் செய்யப்பட்ட தொழு உரம் அல்லது மணலுடன் கலந்து நடவு வயலில் தூவ வேண்டும்.</li> <li>தெளிப்பு நீர்ப் பாசனம் செய்தல்: தண்ணீரை சிக்கனப்படுத்தி குறைந்த அளவு தண்ணீரில் மிகுந்த அளவு பரப்பில் பயறு வகை பயிர்களைச் சாகுபடி செய்திட தெளிப்பு நீர்ப்பாசன கருவி, நடமாடும் தெளிப்பு நீர்க்கருவி மழைத்தூவான் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.</li> </ul> <h3>உழவியல் முறைகள்</h3> <ul style="text-align: justify;"> <li>நிலத்தினை நன்கு ஆழமாக உழவு செய்தல். கோடையுழவு செய்து காய்த் துளைப்பான்களின், கூண்டு புழுக்களைக் கட்டுப்படுத்துதல். பருவத்தில் விதைப்பு செய்தல். <span style="text-align: justify;">பூச்சி, நோய் எதிர்ப்புள்ள ரகங்களைப் பயிரிடுதல். </span></li> <li>துவரை: வம்பன்2 - மஞ்சல் தேமல் நோய்க்கு எதிர்ப்புத் திறன் கொண்டது. ஏ.பி.கே1-காய்த் துளைப்பானுக்கு எதிர்ப்புத்திறன் கொண்டது.</li> <li>உளுந்து: வம்பன்4, 5,6,7, கோ6-மஞ்சல் தேமல் நோய்க்கு எதிர்ப்புத்திறன் கொண்டவை. பாசிப்பயறு: வம்பன்2, வம்பன்3, மஞ்சள் தேமல் நோய்க்கு எதிர்ப்புத்திறன் கொண்டவை.</li> </ul> <p style="text-align: justify;"><strong>நேரடி, இயந்திர முறைகள்</strong></p> <ul style="text-align: justify;"> <li>இரவில் விளக்குப்பொறி வைத்துப் பூச்சிகளைக் கண்காணித்தல். இனக்கவர்ச்சிப்பொறி - ஏக்கர் ஒன்றுக்கு ஐந்து எண்கள் வைத்து பச்சைக் காய்ப் புழு (ஹெலிக்கோவெர்பா), புள்ளிக் காய்ப் புழு (மெளருக்கா). மிளகாய்ப் புழு (ஈட்டியெல்லா) ஆகியவற்றின் அந்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம்.</li> </ul> <h3>உயிரியல் கட்டுப்பாட்டு முறை</h3> <ul style="text-align: justify;"> <li>ஒரு கிலோ விதைக்கு நான்கு கிராம் டிரைக்கோடெர்மா விரிடி அல்லது 10 கிராம் சூடோமோனஸ் புளோரசன்ஸ் உயிரியல் மருந்து கொண்ட விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.</li> <li>சாறு உறிஞ்சும் பூச்சிக்களான அசுவினி இலைப்பேன், தண்டு ஈ, வெள்ளை ஈ, தத்துப்பூச்சிகளைக் கட்டுப்படுத்த வெர்ட்டிசீலியம் லெக்கானி எனும் உயிரியல் பூஞ்சாணக்கொல்லி மருந்தினை ஏக்கருக்கு 1 முதல் 2 கிலோ அளவு வரை கலந்து 15 நாட்கள் இடைவெளியில் இருமுறை தெளிக்க வேண்டும்.</li> <li>பெவேரியா பேசியானா - ஏக்கருக்கு 1 முதல் 2 கிலோ அளவு வரை ஒட்டும் திரவத்துடன் சேர்த்து 200 லிட்டர் தண்ணீர் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் இருமுறை தெளித்து காய்த் துளைப்பான்களைக் கட்டுப்படுத்தலாம்.</li> </ul> <p style="text-align: justify;">ஆதாரம்: உழவரின் வளரும் வேளாண்மை</p> </div>