<div id="MiddleColumn_internal"> <h3 style="text-align: justify;">அறிமுகம்</h3> <p style="text-align: justify;">நறுமணப்பயிர்களின் ராணி என்றழைக்கப்படும் ஏலம் இந்திய அளவில் கேரளாவில் அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது. இரண்டாவதாக கர்நாடகத்திலும், மூன்றாவதாக தமிழ்நாட்டிலும் சாகுபடி செய்யப்படுகிறது. இது ஒரு நீண்ட காலப்பயிராகும்.</p> <p style="text-align: justify;">மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியின் ஒரு பகுதியான பழனி மலைப்பகுதிகளில் சுமார் 600 ஏக்கர் நிலப்பரப்பில், கடல் மட்டத்திற்கு மேல் சுமார் 600 மீட்டர் முதல் 1000 மீட்டர் வரையிலான பகுதிகளில், 10° சென்டிகிரேடு முதல் 35<span style="text-align: justify;">°</span> சென்டிகிரேடு வரை உள்ள தட்பவெப்ப நிலையில் பயிர் செய்யப்படுகிறது.</p> <p style="text-align: justify;">பழனி மலையை பொறுத்தளவு மழையை மட்டுமே எதிர்பார்த்து ஏலம் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு ஆண்டுக்கு சராசரியாக 1400 மி.மீ. முதல் 1800 மி.மீ. வரை மழை கிடைத்து வருகிறது. இந்த பருவமழையானது போதுமான அளவு கிடைக்காத போது அதன் வளர்ச்சி மற்றும் உற்பத்தி மிகவும் பாதிக்கப்படும். ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலத்தில் ஏலத்தில் குருத்துகள் வரத்துவங்கும். இந்த காலங்களில் மண்ணில் போதுமான ஈரப்பதம் இல்லாத போது அதன் வளர்ச்சி தடைபடும்.</p> <p style="text-align: justify;">எனவே தற்போது நிலவி வரும் வறட்சியை சமாளிக்க கீழ்க்கண்ட பாதுகாப்பு முறைகளை கையாள வேண்டும்.</p> <h3 style="text-align: justify;">நீர் பாய்ச்சுதல்</h3> <ul> <li style="text-align: justify;">சொட்டுநீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம் மற்றும் குழாய் நீர் பாசனம் மூலம் பாய்ச்சலாம்.</li> <li style="text-align: justify;">ஆழ்துளைக் கிணற்றிலிருந்து நீரையெடுத்து பாய்ச்சலாம்.</li> <li style="text-align: justify;">மழைக்காலத்தில் தடுப்பணைகளில் சேமித்த நீரை குழாய் மூலமாக பாய்ச்சலாம்.</li> <li style="text-align: justify;">தற்பொழுது தோட்டத்தில் தடுப்பணைகள் இல்லாத விவசாயிகள் சிறிய தடுப்பணைகளை உருவாக்கி மழைக்காலத்தில் வீணாகப் போகும் நீரை சேமித்து, வறட்சிக்காலங்களில் நீரை பாய்ச்சலாம். இதற்கு நறுமணப்பயிர்கள் வாரியம், வேளாண்மை பொறியியல் துறை மற்றும் தோட்டக்கலைத்துறை வழங்கும் மானியத்தை விவசாயிகள் பயன்படுத்தலாம்.</li> </ul> <h3 style="text-align: justify;">சருகிடுதல்</h3> <ul> <li style="text-align: justify;">ஏலச்செடிகளைச் சுற்றி காயந்த இலைகள் மற்றும் களைகள் கொண்டு சருகிடவேண்டும். இவ்வாறு சருகிடுவதன் மூலமாக மண்ணின் ஈரத்தன்மை பாதுகாக்கப்படுகிறது.</li> <li style="text-align: justify;">களைகள் முளைக்காமல் தடுக்கப்படுகிறது.</li> <li style="text-align: justify;">இலைகள், சருகுகள் காய்ந்து மட்கி இயற்கை உரமாக மாறி மண்ணின் வளத்தை பெருக்குகிறது.</li> </ul> <h3 style="text-align: justify;">நிழல் பராமரிப்பு</h3> <p style="text-align: justify;">ஏலத்திற்கு சுமார் 50 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை நிழல் கிடைக்க வேண்டும். இவ்வகை நிழல் கிடைப்பதற்கு சிறிய இலைகளைக் கொண்டு வேகமாக வளரக்கூடிய மரவகைகள் உகந்ததாகும். உதாரணமாக, கருணா, சந்தன வேம்பு, பலா, மஞ்சக்கடம்பு போன்ற மரங்களை நடலாம்.</p> <p style="text-align: justify;">ஆதாரம்: உழவரின் வளரும் வேளாண்மை</p> </div>