<div id="MiddleColumn_internal"> <h3 style="text-align: justify;">அறிமுகம்</h3> <p style="text-align: justify;">இன்றைக்கு இயற்கை வேளாண் உலகில் மண்புழு வளர்ப்பு பற்றிய பல சர்ச்சைகள் வந்துகொண்டிருக்கின்றன. சிலர் மண்புழுவை ஏன் வளர்க்க வேண்டும்? அவைதாம் மண்ணிலேயே இருக்கின்றனவே என்றும், வெளிநாட்டு புழுக்கள் நமக்கு எதற்கு (கலப்பின மாடுகளைப் போல) என்று கூறுபவர்களும் உள்ளனர்.</p> <p style="text-align: justify;">பொதுவாக மண்புழுக்களில் இரண்டு பிரிவுகள் உள்ளன. ஒன்று, மண்ணின் மேல்புறத்தில் சாணத்தை உண்டு, தம்மைப் பெருக்கிக்கொள்ளும் சாணப்புழுக்கள். இவை ஏராளமான கழிவை உண்ணும் திறன் பெற்றவை. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியானவை என்று கருதப்படுபவை. இவற்றில் இரண்டு இனங்களை நமது பண்ணையாளர்கள் பெரிதும் பயன்படுத்துகின்றனர்.</p> <p style="text-align: justify;">ஒன்று Eisenia fetida , மற்றொன்று Eudrilus eugeniae. இந்த இரண்டும் வெளிநாட்டு புழுக்கள் என்று சொல்லப்பட்டாலும், இவற்றின் மூலப் புழுக்கள் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் காணப்படுகிறது</p> <h3 style="text-align: justify;">ஆடு, மாடு, மண்புழு</h3> <p style="text-align: justify;">உலகில் பல இனங்கள் பல சூழலியல் தொகுப்புகளில் தோன்றியிருந்தாலும், அவை பல இடங்களுக்கும் பரவியிருக்கின்றன. இவற்றில் நன்மை செய்பவையும் உண்டு. தீமை விளைவிப்பவையும் உண்டு. புதிய சூழலுக்குப் பல உயிர்கள் நன்கு பொருந்திவிடுகின்றன. நாம் உண்ணும் தக்காளியில் ஆரம்பித்துப் புளி உள்ளிட்ட பல தாவரங்கள் வெளியில் இருந்து வந்தவை. நம்மிடம் இருந்தும் பல தாவரங்கள் மற்ற இடங்களுக்குப் பரவியும் உள்ளன.</p> <p style="text-align: justify;">மேலே கூறிய இரண்டு புழுக்களின் தாயகம் சிலர் கூறுவதுபோல ஐரோப்பா அல்ல, ஆப்பிரிக்கா. மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து ஐரோப்பாவுக்கு அவை எடுத்துச்செல்லப்பட்டன. ஆனால் இந்தியா போன்ற நாடுகளுக்குச் சில வந்துள்ளன. அவை மனிதர்களால் கொண்டுவரப்பட்டதற்கான தரவுகள் இல்லை. என்றாலும், இயற்கைவழி வேளாண்மைக்கு அடிப்படையான மட்கு தயாரிக்க மிகவும் ஏற்ற உயிரினமாக ஆடு, மாடுகளுக்குப் பிறகு மண்புழுக்களே உள்ளன.</p> <p style="text-align: justify;">அதிலும் ஆடு, மாடுகளின் கழிவைப் பயனுள்ள புரதங்களாக மாற்றும் திறனுடன் ஈக்கள், பூச்சிகளின் புழுக்களே உலகில் எஞ்சியுள்ளன. அவற்றில் ஒன்றுதான் மண்புழுக்கள். இவை மீன்களுக்கும் கோழிகளுக்கும் மிகச் சிறந்த புரதம் நிறைந்த உணவு. இதை மறுப்பது அறிவுக்குச் சற்றும் பொருத்தமற்றது. இவற்றால் எந்தவிதத் தீமையும் ஏற்படவில்லை, எந்த மாசுபாடும் ஏற்படவில்லை. அதற்குச் சான்றாகப் பத்தாண்டுகளைத் தாண்டிய மண்புழுப் பண்ணைகள் உள்ளன. அவற்றில் உள்ள தாவரங்கள் செழித்து வளர்கின்றன.</p> <p style="text-align: justify;">எனவே, பசு மாட்டு இறைச்சி அரசியல்போல மண்புழு அரசியலும் மாறிவிடக் கூடாது. மண்புழுப் பண்ணை வேண்டாம் என்று விரும்புபவர்கள், தங்களுடைய பண்ணையை மூடாக்கு மூலமாகத் தோட்டப் புழுக்களை (நாட்டுப் புழுக்கள் என்ற சொல்லைத் தவிர்த்திருக்கிறேன்) பெருக்கிக்கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. இயற்கைவழி வேளாண்மையில் இதுவும் ஒரு முறை, அவ்வளவுதான்.</p> <h3 style="text-align: justify;">மரத்தடி மண்புழு வளர்ப்பு</h3> <p style="text-align: justify;">நமது மண்ணில் உள்ள தோட்டப் புழுக்கள், சாணப்புழுக்களைப் போலக் கழிவை உண்பதில்லை. எனவே, மட்கு தயாரிக்கும் தொழிற்சாலைகளைப் போல, தோட்டப் புழுக்களைக் கொண்ட பல பண்ணைகள் உருவாகிவிட்டன.</p> <p style="text-align: justify;">ஆதாரம்: பசுமை தாயகம்</p> </div>