<div id="MiddleColumn_internal"> <h3 style="text-align: justify;">அறிமுகம்</h3> <p style="text-align: justify;">ஒரே ரகப் பயிருக்கு சுழற்சிமுறை மாற்றுப் பயிராக கோ-8 ரகப் பாசிப்பயறு சாகுபடி செய்தால், குறுகிய காலத்தில் விவசாயிகள் அதிக லாபத்தை பெறலாம்</p> <ul style="text-align: justify;"> <li>விளை நிலத்தில் பயிர் சுழற்சி முறையில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிரில் ஊடுபயிராகவும், மண்ணில் நுண்ணூட்டச்சத்துக்களை அதிகரிக்கவும் பாசிப்பயறு கோ-8 ரகம் மிகவும் சிறந்தது.</li> <li>பயறு வகைப் பயிர் சாகுபடியில் வேரின் முடிச்சுக்களில் வாழ்கின்ற பாக்டீரியாக்கள் வளிமண்டலக் காற்றில் கரைந்துள்ள தழைச்சத்துக்களை கிரகித்து பயிருக்கு வழங்கும்.</li> <li>வேர்கள் அடிமண்ணில் இருப்பதால் மண்ணின் இறுக்கத்தைக் குறைத்து காற்றோட்டத்தை உருவாக்கும்.</li> <li>பயறுவகைப் பயிர்களில் பயறு முதிர்ச்சி அடையும் தருணத்தில் செடிகளின் இலைகள் நிலத்தில் உதிர்வதால் மண்ணில் அங்ககச் சத்துக்களை அதிகரிக்கிறது.</li> <li>அத்துடன் பாசிப்பயறு மிகவும் குறைந்த முதலீட்டில் அதிக மகசூலையும், லாபத்தையும் தருகிறது.</li> </ul> <p style="text-align: center;"><img class="image-inline" src="https://static.vikaspedia.in/media_vikaspedia/ta/images/agriculture/bb5bc7bb3bbeba3bcd-bb5bbfbb5bb0baabcdbaabc1ba4bcdba4b95baebcd/greengram.jpg" /></p> <h3 style="text-align: justify;">நிலம் பண்படுத்துதல்</h3> <ul style="text-align: justify;"> <li>நிலத்தை நன்கு புழுதி உழவு செய்து வடிகால்வசதி செய்து பயறுவகைப் பயிர்களை விதைக்கலாம்.</li> <li>பயறு ரகத்துக்கு ஏற்றவாறு பார்களை அமைத்து விதையை பதிவு செய்யலாம்.</li> <li>விதையைப் பதிக்கும் முன்னர் விதைநேர்த்தி செய்யவேண்டும்.</li> <li>ஒரு கிலோ விதைக்கு இமிடா குளோபிரிட் கலக்கலாம்.</li> <li>சான்றிதழ்பெற்ற விதைகளையே விவசாயிகள் பயன்படுத்த வேண்டும்.</li> </ul> <h3 style="text-align: justify;">உர நிர்வாகம்</h3> <ul style="text-align: justify;"> <li>ஒரு ஏக்கருக்கு 10 வண்டி மக்கிய தொழு உரத்தை தரிசில் அடியுரமாகப் போடவேண்டும்.</li> <li>விதைக்கும் முன் 20 கிலோ யூரியா, சூப்பர் பாஸ்பேட் 60 கிலோ, பொட்டாஷ் 10 கிலோவும் இட வேண்டும்.</li> <li>விதையை பதித்தோ அல்லது விதைத்த பின்போ முதல் தண்ணீர் விடவேண்டும்.</li> <li>மூன்றாம் நாள் உயிர் தண்ணீர் விட வேண்டும்.</li> <li>பின்னர் மண்ணின் தன்மைக்கு ஏற்ப நீர் பாய்ச்ச வேண்டும்.</li> <li>செடிகளில் காய் பிடிக்கும் தருணத்தில் அவசியம் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.</li> <li>நிலத்தில் வறட்சி ஏற்படாமல் பாராமரிக்க வேண்டும்.</li> </ul> <h3 style="text-align: justify;">களை மருந்து பராமரிப்பு</h3> <ul style="text-align: justify;"> <li>விதைத்த 15-வது நாளில் ஒருமுறையும் அடுத்த 15-வது நாளில் ஒருமுறையும் களை வெட்டுவது அவசியம்.</li> <li>பயறுவகை செடிகளில் வறட்சியில் பூக்கள் அதிகம் உதிர்வதைத் தடுக்க பூ பூக்கும் தருணத்தில் தானுப்ளூசி வோன்டர் கரைசலை ஏக்கருக்கு 2 கிலோவை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.</li> <li>நீரில் தெளிப்புத் திரவம் கலந்து தெளிப்பதால் பயிரின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.</li> </ul> <h3 style="text-align: justify;">அறுவடை</h3> <p style="text-align: justify;">பயறு வகைகளைப் பொருத்தவரை இரண்டு அல்லது மூன்று முறை அறுவடை செய்யவேண்டும். கோ- 8 ரகம் விதைத்ததில் இருந்து 65 - 70 நாள்களுக்குள் பயறு ஒரே சீராக வளர்ச்சி அடைவதால் ஒரே முறையில் அறுவடை செய்யலாம். கதிர் அறுவடை இயந்திரம் மூலமாகவும் அறுவடை செய்யலாம். ஒரு ஏக்கருக்கு 450 முதல் 520 கிலோ மகசூல் கிடைக்கும். இன்று சந்தையில் ஒரு கிலோ பாசிப்பயறு கிலோ 70ரூபாய். 65 நாளில் குறைந்தபட்சம் 33000 ரூபாயை விவசாயி பெறலாம்</p> <p style="text-align: justify;">ஆதாரம்: வேளாண்மை அறிவியல் மையம், மதுரை</p> </div>