<div id="MiddleColumn_internal"> <h3 style="text-align: justify;">அறிமுகம்</h3> <p style="text-align: justify;">பெருகி வரும் மக்கட்தொகைக்கு ஏற்ப நாம் உணவு உற்பத்தியைப் பெருக்க வேண்டும். தற்போது விவசாயத்திற்கென உள்ள நிலங்களின் அளவு குறைந்து வருவதால் விவசாயிகள் தீவிர சாகுபடி முறைகளை பின்பற்றுகின்றனர். மேலும், நகர்புறத்தை ஒட்டி காய்கறிகளுக்கு அதிக விலை கிடைப்பதால் உழவர்கள் கத்தரி, வெண்டை, முட்டைகோசு மற்றும் காலிபிளவர் போன்ற காய்கறிகளை அதிக அளவில் பயிரிடுகின்றனர். அவற்றில் பூச்சிகளின் தாக்குதல் அதிக அளவில் உள்ளதால் அவற்றைக் கட்டுப்படுத்த இரசாயன பூச்சிகொல்லிகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். மேலும், மருந்து தெளிப்பதற்கும் அறுவடைக்கும் இடையே குறைந்த இடைவெளியைக் கடைபிடிக்கின்றனர். ஆதலால் எஞ்சிய நஞ்சு காய்கறிகளில் இருப்பதற்கான சாத்தியக்கூறு உள்ளது. அவற்றை உட்கொள்ளும் போது மனித உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் அபாயம் உள்ளது. அதனால் தற்போது மக்களிடையே விழிப்புணர்வு கூடியுள்ளது. எனவே, இயற்கை விவசாய முறையில் விளைந்த உணவுப் பொருட்களையே உட்கொள்ள விரும்புகின்றனர். ஆனால், விலை அதிகமாக உள்ளதால் நடுத்தர மக்கள் வாங்கி பயன்படுத்துவது எட்டாக்கனியாக உள்ளது. எனவே, சந்தையில் கிடைக்கும் காய்கறிகளிலிருந்து நஞ்சினை நீக்குதல் அவசியம்.</p> <h3 style="text-align: justify;">சில வேதிக்காரணிகள்</h3> <ul style="text-align: justify;"> <li>எஞ்சிய நஞ்சினை நீக்குவதற்காக சில வேதிக்காரணிகள் (அமிலம், வினிகர், சமையல் சோடா) கொண்டு உணவுப் பொருட்களை கழுவுவதன் மூலம் எஞ்சிய நஞ்சின் அளவினைக் குறைக்கலாம்.</li> <li>நம் தாய்மார்கள் நாள்தோறும் சமையல் கூடத்தில் உபயோகிக்கும் சில காரணிகள் (உப்பு, புளி) மற்றும் சமைக்கும் முறைகள் (ஆவியில் வேகவைத்தல்) மூலம் உணவுப் பொருட்களில் எஞ்சிய நஞ்சின் அளவு குறைக்கப்படுகிறதா என்று ஆய்வுக் கூடத்தில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.</li> <li>அதில் நீரில் காய்கறிகளை கழுவுவதன் மூலம் 40 விழுக்காடு வரை எஞ்சிய நஞ்சின் அளவு குறைகிறது. மேலும், இரு விழுக்காடு உவர் நீர் மற்றும் புளிக் கரைசல் (அதாவது 20 கிராம் புளி அல்லது கல் உப்பை ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலவைநீர்) தயாரித்து கழுவுவதன் மூலம் 52 விழுக்காடு வரை எஞ்சிய நஞ்சினை நீக்கலாம் என ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டது.</li> <li>மேலும், இவ்வாறு கழுவிய காய்கறிகளை ஆவியில் வேகவைக்கும் பொழுது 60 விழுக்காடு வரை எஞ்சிய நஞ்சு குறைகிறது. இதுபோன்று காய்கறிகளை சாதாரண முறையில் நீரில் கழுவுவதாலும், பின்பு வேகவைத்து உண்பதாலும் பூச்சிகொல்லியின் எஞ்சிய நஞ்சினை நீக்கி உடலுக்கு கேடு விளையாதபடி காய்கறிகளை பயமின்றி உட்கொள்ளலாம் என ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.</li> </ul> <p style="text-align: justify;">ஆதாரம்: வேளாண் பூச்சியியல் துறை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் - 641 003</p> </div>