அறிமுகம் ஆடிப்பட்டத்துக்கான கம்பு சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள் நேரடி விதைப்பு முறையிலும் அதனை சாகுபடி செய்து பயன்பெறலாம். பாசன நிலங்களுக்கான காலம் மற்றும் ரகங்கள் விவரம் நீலகிரியை தவிர அனைத்து மாவட்டங்களிலும் கம்பு சாகுபடி செய்யலாம். கோ 7 கோ 9 எக்ஸ் 7 ஐசிஎம்வி 221 கம்பு கலப்பினம் கோ 6 ஆகியவற்றை பயிரிடலாம். மாசிப்பட்டம் (ஜனவரி -பிப்ரவரி) சித்திரைப்பட்ட ரகங்களே மாசிப்பட்டத்துக்கும் ஏற்றது. மானாவாரி சாகுபடிக்கான காலம் மற்றும் ரகங்கள் ஆடிப்பட்டம் (ஜூன் - ஜூலை) கோ 7 கோ 9 எக்ஸ்7 ஐசிஎம்வி 221 கம்பு கலப்பினம் கோ 6 இதே ரகங்களை புரட்டாசிப்பட்ட (செப்டம்பர்-அக்டோபர்) சாகுபடிக்கு பயன்படுத்தலாம். கம்பு பயிரை நாற்றாங்கல் முறையில் மட்டுமல்லாது நேரடி விதை விதைப்பு முறையிலும் பயிரிடலாம். மாசிப்பட்டத்திலும் நேரடி விதைப்பு முறை பலன் தரும். நேரடி விதை விதைத்தல் கம்பு விதைகளை 2 % பொட்டாசியம் குளோரைடு அல்லது 3 % சோடியம் குளோரைடில் 16 மணிநேரம் ஊறவைத்து பின் 5 மணி நேரம் நிழலில் உலர்த்துவதால் விதையின் முளைப்புத்திறன் அதிகரிக்கும். அனைத்து ரகங்களுக்கும் 45 -க்கு 15 செ.மீ. இடைவெளி அவசியம். ஊடுபயிர் நடுவதாக இருந்தால் கம்புக்கு 30-க்கு 15 செ.மீ மற்றும் ஊடுபயிருக்கு 30-க்கு 10 செ.மீ இடைவெளி அவசியமானது. ஒரு ஜோடி வரிசையில் கம்பும் ஒரு வரிசையில் ஊடுபயிரும் விதைக்க வேண்டும். பார் மற்றும் வாய்க்கால் முறையில் நடவு செய்வதற்கு 5 கிலோ விதை தேவைப்படும். விதைகளின் இடைவெளி 4-5 செ.மீ இருக்க வேண்டும். குருத்து ஈ தாக்குதல் நிறைந்த பகுதிகளில் 12.5 கிலோ விதைகளை ஒரு ஹெக்டேருக்கு விதைக்கவும். தானிய விதைகளை 5 செ.மீ இடைவெளியில் விதைக்க வேண்டும். களை மேலாண்மை விதைத்த 3 நாட்களுக்கு பிறகு களை முளைப்பதற்கு முன் ஹெக்டேருக்கு அட்ராசைன் 0.25 கிலோ என்ற அளவில் 500 லிட்டர் தண்ணீரில் கலந்து மண்ணின் மேற்பரப்பில் தெளிப்பான் உதவியால் தெளிக்கவும். மண்ணில் தேவையான அளவு ஈரப்பதம் இருக்கும் பட்சத்தில் களைக்கொல்லியை பயன்படுத்த வேண்டும். விதைத்த 30 அல்லது 35 நாள்களுக்கு பிறகு கையால் களையெடுக்கவும். களைமுளைப்பதற்கு முன் களைக்கொல்லிகளை பயன்படுத்தவும். களை முளைப்பதற்கு முன் களைகொல்லி தெளிக்கவில்லை என்றால் விதைத்த பிறகு 15 மற்றும் 30 ஆவது நாளில் இரண்டு முறை கையினால் களை எடுக்கவும். மேலுரமிடுதல் நேரடி விதைத்தலில் உரத்தை பட்டையில் இட வேண்டும். ஊடுபயிராக தானியம் விதைத்திருந்தால் உரத்தை கம்பிற்கு மட்டும் இட வேண்டும். உரம் வைத்த பிறகு பாசனம் செய்ய வேண்டும். வானிலைக்கு தக்கவாறும், மண்ணின் தன்மைக்கு ஏற்றும் நீர் மேலாண்மையை கையாள வேண்டியது அவசியம். உரிய பரிந்துரைகளை பின்பற்ற வேண்டும். பயிர் அறுவடை முதிர்ந்ததற்கான அறிகுறியாக இலைகள் மஞ்சள் நிறமாக காட்சியளிக்கும். உலர்ந்த தோற்றத்திலும் காணப்படும். தானியங்கள் கடினமாக இருக்கும். தானியக் கதிரை தனியாக அறுக்க வேண்டும். வைக்கோலை ஒருவாரம் காயவிட்டு போக்குவரத்து எளிதாக இருக்கும்போது அறுவடை செய்யவேண்டும். கதிரடுத்தல், தூய்மைசெய்தல், உலர்த்துதல் மற்றும் சேமித்தல் ஆகியவற்றில் வேளாண்மைத்துறையின் பரிந்துரைகளை தவறாமல் பின்பற்றுவதன் மூலம் சேதாரமின்றி லாபம் பெறலாம். அறுவடை பின்சார் தொழில்நுட்பம் கம்பு இந்தியாவில் அதிகம் விளையக்கூடிய சிறு தானியம் ஆகும். இது கோதுமையில் உள்ள அளவில் புரதத்தைக் கொண்டது. இந்த புரதத்தில் அதிக அளவு புரோலமைன் அடுத்தபடியாக குளோபுலின் மற்றும் அல்புமின் கொண்டுள்ளது. பாலிஷ் செய்த கம்பு சுவையாகவும் தோற்றத்தில் நன்றாகவும் இருக்கிறது. பாப்கார்ன் மற்றும் மால்ட் செய்ய ஏற்றது. அரிசியை போன்று வேக வைத்தும் உண்ணலாம். ராகி மாவு சப்பாத்தி செய்யவும், கூழ் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. ஆதாரம்: உழவரின் வளரும் வேளாண்மை