தோட்டக்கலை (Horticulture) பழப்பயிர்கள், காய்கறிப் பயிர்கள், மலர்ப்பயிர்கள், நறுமணப் பயிர்கள், மலைத்தோட்டப் பயிர்கள், மூலிகைப் பயிர்கள் போன்றவற்றின் சாகுபடி, தோட்டக்கலை வடிவமைப்பு மற்றும் விளைப்பொருட்களை பதப்படுத்தும் முறைகள் பற்றிய இயலுக்கு தோட்டக்கலை என்று பெயர். இந்திய பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு முதுகெலும்பாக விளங்குபவை தோட்டக்கலைப் பயிர்களாகும். தோட்டப் பயிரிலிருந்து கிடைக்கும் பொருட்கள் அயல்நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதன் மூலம் வாணிபம் வளர்ந்து அந்நியச் செலாவணி கிடைக்கிறது. காய்கறிப் பயிர்கள் (Vegetable Crops) காய்கறிப் பயிர்களைப் பற்றிய அறிவியல் காய்கறியியல் (Olericulture) ஆகும். மனித உணவில் காய்கறிகளின் பங்கு மிகவும் இன்றியமையாதது. பயிர்களின் வேர், தண்டு, இலை, பூ, காய், பழம், விதை போன்ற பாகங்களைப் பச்சையாகவோ, சமைத்தோ உண்ண உதவும் தாவர வகைகள் காய்கறிகள் என்று பொதுவாக அழைக்கப்படுகின்றன. காய்கறிகள், உயிர்ச்சத்துக்கள் (Vitamins), தாதுப்பொருட்கள் (Minerals), புரதச்சத்து (Proteins), மாவுச்சத்து (Carbohydrates) போன்றவற்றை அதிக அளவில் கொண்டுள்ளன. மனிதன் தான் உண்ணும் உணவில் சராசரியாக 20 சதம் அளவிற்கு காய்கறிகளை எடுத்துக் கொள்ள வேண்டும். வைட்டமின் A அதிகம் உள்ள காய்கறிகள் கேரட் தக்காளி முட்டைகோஸ் புதினா கொத்தமல்லி தண்டுக்கீரை முருங்கைக்கீரை வைட்டமின் B அதிகம் உள்ள காய்கறிகள் சோயாபீன்ஸ் பட்டர்பீன்ஸ் பட்டாணி முள்ளங்கி பெல்லாரி வெங்காயம் வைட்டமின் C அதிகம் உள்ள காய்கறிகள் முட்டைக்கோஸ் தக்காளி மிளகாய் முளைக்கீரை பிரக்கோலி வைட்டமின் D அதிகம் உள்ள காய்கறிகள் சோயாபீன்ஸ் பட்டர்பீன்ஸ் அவரைக்காய் கொத்தவரை முட்டைகோஸ் லெட்டுஸ் வைட்டமின் E அதிகம் உள்ள காய்கறிகள் வெண்டைக்காய் பீர்க்கங்காய் கோவைக்காய் லெட்டுஸ் முட்டைக்கோஸ் காலிபிளவர் வைட்டமின் K அதிகம் உள்ள காய்கறிகள் தக்காளி காலிஃபிளவர் முட்டைகோஸ் லெட்டுஸ் பீர்க்கங்காய் வெண்டைக்காய் கால்சியம் சத்துள்ள காய்கறிகள் மிளகாய் வெண்டைக்காய் அவரைக்காய் சேனைக்கிழங்கு பாஸ்பரஸ் சத்துள்ள காய்கறிகள் வெள்ளரி காலிஃபிளவர் பசலைக்கீரை இரும்புச்சத்துள்ள காய்கறிகள் கருவேப்பிலை பாகற்காய் புதினா பீட்ரூட் முருங்கைக்காய் முருங்கைக்கீரை பழப்பயிர்கள் (Fruit Crops) இந்தியாவில் பலவிதமான தட்பவெப்பநிலை நிலவுவதால் பலவகைப்பட்ட பழப்பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. பழங்கள் பற்றிய அறிவியலுக்கு பழவியல் (Pomology) என்று பெயர். பழப்பயிர்களின் இனவிருத்தி, தரமான பழங்களின் உற்பத்தி, பழப்பயிர்கள் பாதுகாப்பு மற்றும் பதப்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும். பழங்களில் காணப்படும் சத்துக்கள் ஒரு மனிதன் நாளொன்றுக்கு சராசரியாக 25 கிராம் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பழங்களில் மாவுச்சத்து, புரதம், வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கள் உள்ளன. மாவுச்சத்து நிறைந்த பழங்கள் வாழை பேரிட்சை ஆப்பிள் பலாப்பழம் தாதுப்பொருட்கள் அதிகம் உள்ள பழங்கள் முந்திரி வெண்ணெய் பழம் வில்வம் திராட்சை பேரிச்சை எலுமிச்சை பப்பாளி நார்ச்சத்து மிகுந்த பழங்கள் வாழை அன்னாசிப்பழம் சப்போட்டா மாம்பழம் வைட்டமின் 'C' சத்துள்ள பழங்கள் எலுமிச்சை கொய்யா திராட்சை பழங்களில் உள்ள அங்கக அமிலங்கள் பசியைத் தூண்டவும், உணவு செரிக்கவும் உதவி புரிகின்றன. பப்பாளியில் புரதத்தை கரைக்கும் நொதிகள் உள்ளன. இதைத்தவிர செல்லுலோஸ், பெக்டின், பெப்சின் போன்ற சத்துக்களும் அதிகம் காணப்படுகின்றன. பழங்கள் சிறந்த காப்புணவாகவும், துணை உணவாகவும் செயல்படுகின்றன. பழப்பயிர்களில் மா மற்றும் வாழை அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. பலாப்பழம் பழப்பயிர்களின் ராஜா என்றும் மங்குஸ்தான் ராணி என்றும் அழைக்கப்படுகிறது. கிழங்கு வகைப்பயிர்கள் (Tuber Crops) கிழங்கு வகைப் பயிர்கள் முக்கிய துணை உணவுப் பொருட்களாக பயன்படுகின்றன. இவற்றில் சர்க்கரை வள்ளிக் கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, சேனைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, கொடிவள்ளிக் கிழங்கு, கருணைக்கிழங்கு, சிறுகிழங்கு மற்றும் உருளைக்கிழங்கு போன்றவை முக்கிய கிழங்கு வகைப் பயிர்கள் ஆகும். கிழங்கு வகைப் பயிர்களில் சர்க்கரைச்சத்து, புரதச்சத்து, மாவுச்சத்து மற்றும் தாதுச்சத்துக்கள் அடங்கி உள்ளன. மேலும் வைட்டமின்களும் அதிகம் காணப்படுகின்றன. நறுமணப் பயிர்கள் (Spices and Condiments) வேளாண் பொருட்களில் இந்திய பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுப்பது நறுமணப் பயிர்களே ஆகும். மனிதனின் மருத்துவத் தேவைக்காகவும், உணவுப்பொருட்களை மணமூட்டவும், சுவையூட்டவும் நறுமணப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. பல்வேறு தாவரங்களின் வெவ்வேறு பாகங்களான இலைகள், காய்கள், பட்டைகள், பூக்கள், பூமொட்டுகள், விதைகள் போன்றவை நறுமணமூட்ட பயன்படுத்தப்படுகின்றன. விதை நறுமணப்பயிர்கள் கொத்தமல்லி, பெருஞ்சீரகம், ஏலக்காய், மிளகு, சீரகம், வெந்தயம், சோம்பு, ஓமம் போன்றவை முக்கிய விதை நறுமணப்பயிர்களாகும். இதில் மிளகு வாசனைப் பயிர்களின் ராஜா எனவும், ஏலக்காய் ராணி எனவும் அழைக்கப்படுகின்றன. மேலும் மிளகிற்கு கறுப்புத் தங்கம் என வேறு பெயரும் உண்டு. மரவாசனைப் பயிர்கள் கிராம்பு ஜாதிக்காய் இலவங்கப்பட்டை கறிவேப்பிலை மூலிகை வாசனைப் பயிர்கள் ரோஸ்மேரி நீர்பிரம்மி இதர வாசனைப் பயிர்கள் வெனிலா குங்குமப்பூ பெருங்காயம் வெள்ளைப்பூண்டு இஞ்சி மஞ்சள் மலர்ப்பயிர்கள் (Flower Crops) மலர்கள், அழகு, அன்பு மற்றும் அமைதியின் அடையாளமாக கருதப்படுகின்றன. இது மட்டுமின்றி கொய்மலர் உற்பத்தி மற்றும் வாசனை திரவியங்கள் தயாரிப்பு போன்றவை நாட்டின் பொருளாதார மேம்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மலர்கள் புனிதமானவைகளாக கருதப்படுவதால், கடவுள் வழிபாடு, விழாக்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது. மலர்களிலிருந்து பெறப்படும் வாசனைப் பொருட்கள் பல்வேறு தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகின்றன. மலர்ப் பயிர்களின் விதை மற்றும் நாற்றங்கால் உற்பத்தி பலருக்கு வேலை வாய்ப்பினை அளித்து வருகிறது. அழகு மலர்ப்பயிர்கள் ரோஜா மல்லிகை முல்லை சாமந்தி கனகாம்பரம் செண்பகம் மனோரஞ்சிதம் தாழம்பூ அலங்கார மலர்ப்பயிர்கள் ரோஜா மல்லிகை இட்லிப்பூ செம்பருத்தி தாமரை அல்லி சாமந்தி ஆந்துாரியம் ஜெர்பெரா ஜெரேனியம் கினியா கிளாடியோலஸ் செண்டுமல்லி அரளி வாசனை திரவிய மலர்ப்பயிர்கள் ரோஜா மல்லிகை சாமந்தி மரிக்கொழுந்து பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மலர்கள் ரோஜா ஜெர்பெரா ஜெரேனியம் கினியா கிளாடியோலஸ் ஆந்தூரியம் மலைத்தோட்டப் பயிர்கள் (Plantation Crops) மலைப்பிரதேசங்களில் பயிரிடப்படும் பயிர்களுக்கு மலைத்தோட்டப்பயிர்கள் என்று பெயர். காப்பி தேயிலை கோகோ தென்னை கமுகு முந்திரி சின்கோனா யூக்கலிப்டஸ் ரப்பர் போன்றவை மலைத்தோட்டப் பயிர்களில் முக்கியமானவை. இதில் காப்பி, தேயிலை, கோகோ போன்றவை சிறந்த உணவு சார்ந்த பொருட்களாகப் பயன்படுகின்றன. ரப்பர், தென்னை, மூங்கில், சவுக்கு போன்றவை அதிக வேகத்தில் வளர்வதால் மழையை வருவித்து நீர்வளத்தை மேம்படுத்துகிறது. உபயோகிக்கப்படும் பாகங்கள் காப்பி விதை தேயிலை கொழுந்து இலைகள் தென்னை கமுகு பழம் முந்திரி பொய்க்கனி யூக்கலிப்டஸ் இலை கோகோ மூலிகைப் பயிர்கள் (Medicinal Plants) ஒரு சில பயிர்கள் மற்றும் பயிர்களின் பாகங்கள் மனிதன் மற்றும் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்தும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வகைப் பயிர்கள் மூலிகைப் பயிர்கள் எனப்படும். இவ்வகைப் பயிர்களின் பாகங்களில் சேமித்து வைக்கப்படும் ரசாயனக் கூட்டுப் பொருட்கள் மருத்துவ குணம் கொண்டவைகளாக இருக்கின்றன. இம்மருத்துவ குணத்தைப் பொறுத்து மூலிகைப் பயிர்கள் பின்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றன. மூலிகைப் பயிர்களின் வகைப்பாடு அல்கலாய்டுகள் (Alkaloids) சின்கோனா ஊமத்தை கோகோ பெல்லடோனா கிளைக்கோலைடுகள் (Glycolides) கற்றாழை அவுரி கார்டிகோஸ்டிராய்டுகள் (Corticosteroids) டயஸ்கோரியா மருந்துக்கத்தரி அத்தியாவசிய எண்ணெய்கள் (Essential Oils) புதினா மூலிகைப் பயிர்களின் முக்கியத்துவம் நோய் தீர்க்கும் மருந்து தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மூலிகைப் பயிர்கள் நம் நாட்டின் அந்நிய செலாவணியை பெருக்குகின்றன. மூலிகைப் பயிர் உற்பத்தி மற்றும் பயன்பாடு வேலை வாய்ப்புக்கு வழிவகை செய்கிறது. இலாகிரிப் பயிர்கள் (Norcotics) சில பயிர்களின் பாகங்களை உட்கொள்ள பயன்படுத்தும்போது அவற்றிலுள்ள ரசாயனப் பொருட்கள் நரம்பு மண்டலத்தை தூண்டி புத்துணர்ச்சியை ஏற்படுத்துகின்றன. அவ்வகைப் பயிர்கள் இலாகிரிப் பயிர்கள் எனப்படும். உ.ம். காபி, தேயிலை, புகையிலை புகையிலை இது இலைக்காக சாகுபடி செய்யப்படும் முக்கிய பணப்பயிராகும். சோப்பு, சாயத் தொழிற்சாலைகளில் மட்டுமின்றி பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கவும், போதைப்பொருள் தயாரிப்பிலும் பயன்படுகிறது. தேயிலை இது ஆரோக்கியப் பயிர் என்றும் அழைக்கப்படுகிறது. உலகில் அதிக மக்கள் பயன்படுத்தும் முக்கிய பான வகையாகும். காபி இதன் விதைகள் புத்துணர்ச்சி அளிக்கும் பானம் தயாரிக்கப் பயன்படுகிறது. இதில் காஃபின் என்ற ரசாயனப் பொருள் அடங்கியுள்ளது. தோட்டம், மலர்கள், பழங்கள் போன்ற வார்த்தைகள் நற்பயனை அளிக்கும் தோட்டக்கலை பயிர்களுடன் தொடர்புடையது. வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கள் மிகக் குறைந்த அளவே தேவைப்பட்டாலும், மிகவும் அவசியமானது என்பதால் ஒவ்வொரு தோட்டக்கலைப்பயிரும் மனித வாழ்விற்கு மிகவும் முக்கியமானதாகும். எனவே தோட்டக்கலைப்பயிர் உற்பத்தி மனிதனுக்கு இலாபத்தைக் கொடுப்பதுடன் அன்பு, அமைதி, அழகு, நறுமணம் மற்றும் அன்னிய செலாவணியையும் கொடுக்கிறது. ஆதாரம்: உழவரின் வளரும் வேளாண்மை