நோக்கம் கத்தரி ஒரு முக்கிய காய்கறிப்பயிராகும். கத்தரி உலகமெங்கும் பயிர் செய்யப்படுகிறது. இது அனைத்து வயதினரும் விரும்பி உண்ணும் காய்கறிப்பயிராகும். பழுக்காத கத்தரி காயை சமையலுக்கு பயன்படுத்துகின்றனர். கத்தரியில் அதிக அளவில் சத்துப்பொருட்களான வைட்டமின் ஏ மற்றும் பி இருக்கின்றது. கத்தரி நீரழிவு நோயைக் கட்டுப்படுத்த மருந்தாகவும் பயன் படுத்தப்படுகின்றது. இந்தியாவில் 5 லட்சம் எக்டரில் இதனை பயிரிடுகின்றனர். இதன் மகசூல் 16 டன் / எக்டர் ஆகும். கத்தரி பயிரை ஏறக்குறைய 100 வகையான பூச்சிகள் தாக்கி சேதப்படுத்துகிறது. இதனால் மகசூல் 40 முதல் 50 சதம் வரை குறைகிறது. இவ்வாறான சேதம் விளைவிக்கும் பூச்சிகளைத் தடுத்து உரிய இலாபத்தை ஈட்டுவது நம் தலையாய கடமையாகும். தண்டு மற்றும் காய் துளைப்பான் - லூஸிநோடஸ் ஆர்போனாலிஸ் தாக்குதலின் அறிகுறிகள் இந்த பூச்சி இளம் பயிரைத் தாக்குவதால் நடவு செய்த 15 முதல் 20 நாட்களில் கத்தரி செடிகளின் குருத்து இலைகள் வாடிக்காய்ந்து தொங்கி விடும். இந்த செடிகளின் தண்டுகளை கிள்ளி உள்ளே பார்த்தால் வெள்ளை நிறப்புழு காணப்படும். இப்புழுவானது காய்கள் வளர்ந்து வரும் சமயத்தில் காய்களைக் குடைந்து சேதப்படுத்துகிறது. இதனால் வளர்ச்சி குன்றி காணப்படும். வாழ்க்கை சுழற்சி தாய் பூச்சியானது முட்டையை தனித்தனியாக செடிகளின் இலைகளில் இடுகிறது. முட்டை பொறிக்கும் காலம் மூன்று முதல் ஐந்து நாட்கள் ஆகும். முழு வளர்ச்சியடைந்த புழுக்கள் இளஞ்சிவப்பு நிறமாக இருக்கும். புழுக்களின் வாழ்வு காலம் 10 முதல் 15 நாட்கள் ஆகும். கூட்டுப்புழுக்கள், காய்கள் மற்றும் தண்டுகள் மேல் ஒட்டிக்கொண்டிருக்கும். கூட்டுப்புழுவிலிருந்து முழு வளர்ச்சியடைந்த தாய்ப் பூச்சி 6 முதல் 8 நாட்களில் வெளிவரும். தாய்ப்பூச்சியின் முன் இறக்கைகளில் சிவப்பு நிற கோடுகள் காணப்படும். பின் இறக்கைகளில், கறுப்பு நிற புள்ளிகள் காணப்படும். தாய்ப்பூச்சி 200 முதல் 250 முட்டைகள் வரை இடும். கட்டுப்படுத்தும் முறைகள் தாக்கப்பட்ட செடிகளின் நுனித் தண்டினை கிள்ளி எறிந்து விடவேண்டும். பாதிக்கப்பட்ட சொத்தை காய்களைப் பறித்து அழித்து விடவேண்டும். தாய்பூச்சிகளை விளக்குப்பொறியை வைத்து கவர்ந்து இழுத்து அழிக்கலாம். முட்டை ஒட்டுண்ணியான டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் 50000 / எக்டர் என்ற அளவில் நான்கு முறை விட வேண்டும். கார்பரில் 50 சதவீதம் 2 கிராம் /லிட்டர் (அ) நனையும் கந்தகத்தூள் 50 சதவீதம் 2 கிராம்/ லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்க வேண்டும். எண்டோசல்பான் 35 இசி 2 மி.லி. / லிட்டருடன் வேப்ப எண்ணெய் 3 சதம் (அ) குயினால்பாஸ் 25 இசி 2 மி.லி./ லிட்டருடன் வேப்ப எண்ணெய் 3 சதம் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும். வேப்பங்கொட்டை பருப்புச்சாறு 5 சதம் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும். செயற்கை பைரித்திராய்டு பூச்சி கொல்லிகளை தவிர்க்கவும். சாறு உறிஞ்சும் பூச்சிகள் - அசுவிணி (ஏபிஸ் காஸிப்பி மற்றும் மைசஸ் பெர்சிகே) தாக்குதலின் அறிகுறிகள் இளம் மற்றும் வளர்ந்த அசுவிணிகள் இலையில் இருந்து கொண்டு, சாற்றை உறிஞ்சி செடிகளை வளர்ச்சி குன்ற செய்கிறது. இதனால் இலைகள் சிறியதாகி, வளர்ச்சி குன்றி காணப்படுகிறது. மேலும் காய்கள் பிடிக்காமல் மகசூல் பாதிக்கப்படுகிறது. பூச்சியின் விபரம் ஏபிஸ்காஸிப்பி அசுவிணியானது பச்சை அல்லது வெள்ளை நிறத்தில் இருக்கும். மைசஸ் பெர்சிகே பச்சை அல்லது சிவப்பு நிறமாக இருக்கும். வயிற்றுப் பகுதிகளில் ஒரு ஜோடி சிறிய ஊசி போன்ற குழல்கள் காணப்படும். இவை தேன் போன்ற திரவத்தினை சுரக்கிறது. இதனால் இலைகளின் மேற்பரப்பில் கரிப்பூசண நோய் தோன்றுகிறது. இந்நோயினால் ஒளிச்சேர்க்கை பாதிக்கப்பட்டு விளைச்சல் குறைகிறது. கட்டுப்படுத்தும் முறைகள் அசுவிணியினால் பாதிக்கப்பட்ட இலைகள், கிளைகள், தளிர்களை பூச்சிகளுடன் சேகரித்து அழிக்க வேண்டும். அசுவிணி தாக்குதலைத் தாங்கக்கூடிய அண்ணாமலை 1 கத்தரி வகையை பயிரிடலாம். மஞ்சள் நிற ஒட்டு பொறிகள் மற்றும் விளக்குப்பொறிகள் மூலம் பூச்சிகளின் நடமாட்டத்தைக் கண்டறியலாம். கிரைசோபேர்லா கார்னியா பூச்சிகளின் முதல் நிலை குஞ்சுகளை ஒரு எக்டருக்கு 10,000 என்ற அளவில் வெளியிட்டு கட்டுப்படுத்தலாம். டைமீத்தோயேட் 30 இசி 2 மி.லி. / லிட்டர் (அ) மீத்தைல் டெமட்டான் 25 இசி 2 மி.லி./லிட்டர் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். பச்சைத் தத்துப்பூச்சி தாக்குதலின் அறிகுறிகள் இளநிலை மற்றும் முதிர்ந்த நிலை தத்துப்பூச்சிகள் இலையின் அடிப்பாகத்தில் இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சுகின்றன. இதனால் இலைகள் மஞ்சள் நிறமாக மாறிவிடுகின்றன. பின்னர் இலைகள் பழுப்பாகி, கருகி விழுந்துவிடும். பூச்சியின் விபரம் பெண் தத்துப்பூச்சி முட்டைகளை இலைகளின் நரம்புகளின் இடையே இடும். முட்டையில் இருந்து வெளிவரும் இளம் குஞ்சுகள் இளம் பச்சை கலந்த மஞ்சள் நிறத்தில் இருக்கும். வளர்ந்த பூச்சி பச்சை நிறத்தில் இருக்கும். கட்டுப்படுத்தும் முறைகள் சிறு இலை நோய் தாக்கிய செடிகளை பிடுங்கி எரித்து விடவேண்டும். தத்துப் பூச்சியால் தாக்கப்பட்ட இலைகளை பூச்சிகளுடன் சேகரித்து அழித்து விடவேண்டும். மீத்தைல் டெமட்டான் 25 இசி 2 மி.லி./ லிட்டர் அல்லது டைமீத்தோயேட் 30 இசி 2 மி.லி. / லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்க வேண்டும். சாம்பல் நிறக்கூன்வண்டு (மில்லோசிரஸ் இனம்) முதிர்ந்த வளர்ச்சியடைந்த கூன்வண்டுகள் இலைகளின் ஓரங்களைக் கடித்துத் தின்கிறது. இதன் புழுக்கள் வேர்களைக் கடித்துத் தின்பதால் செடிகள் வாடிவிடுகின்றன. புழு மிகப் பெரியதாகவும், 'C' போல வளைந்தும் வெள்ளை உடலுடன் பழுப்பு நிறத் தலையுடனும் காணப்படும். இதன் வண்டுகள் பழுப்பு நிறத்தில் காணப்படும். ஒரு பெண் வண்டு 50 - 100 முட்டைகளை மண்ணில் இடும். கட்டுப்படுத்தும் முறைகள் முதிர்ந்த வண்டுகளை சேகரித்து அழித்து விடவேண்டும். நடவு செய்வதற்கு முன்புவின்ஸ்ட ன் 1.3 சதத்தூள் 25 கிலோ / எக்டர் என்ற அளவில் இடவேண்டும். ஒரு எக்டருக்கு கார்போஃ.பியூரான் 15 கிலோவை நட்ட 15 நாட்களுக்கு பின்னர் செடிகளின் வேர்பாகத்தில் இடவேண்டும். புள்ளி இலை வண்டு (ஏபிலக்னா விஜின்டிஆக்டோபங்க்டேட்டா) வண்டு மற்றும் புழு பருவம் இலைகளில் உள்ள பச்சையத்தை சுரண்டி உண்ணும். பிறகு சுரண்டிய பகுதிகள் காய்ந்து விடும். வண்டுகள் மிக வேகமாக பறக்கக் கூடிய திறன் வாய்ந்தது. புழு ஒரே இடத்தில் நிலையாக நின்று சாப்பிடும் பூச்சியின் விபரம் ஏபிலக்னா விஜின்டிஆக்டோபங்க் டேட்டா என்ற வண்டில் ஒவ்வொரு இறக்கையிலும் 14 புள்ளிகள் காணப்படும். எ. டியேகேஸ்டிமா என்ற வண்டின் இறக்கையில் 6 புள்ளிகள் காணப்படும். நீள்வடிவ முட்டையினை இலையில் இடுகிறது. புழுவின் உடலில் முள் போன்ற பகுதிகள் காணப்படும். முழு வளர்ச்சியடைந்த புழுவின் காலம் 10 முதல் 35 நாட்கள் ஆகும். கூட்டுப்புழுவானது இலை மற்றும் தண்டு பகுதிகளில் காணப்படும். கூட்டுப்புழு நிலையின் காலம் 3 முதல் 5 நாட்கள் ஆகும். மொத்த பூச்சியின் வாழ்வுக் காலம் 20 முதல் 40 நாட்கள் இருக்கும். கட்டுப்படுத்தும் முறைகள் முட்டை, புழு மற்றும் வண்டுகளை சேகரித்து அழித்து விட வேண்டும். கார்பரில் 50 சதம் 2 கிராம்/ லிட்டர் அல்லது எண்டோசல்பான் 35 இசி 2 மில்லி / லிட்டர் அல்லது மாலத்தியான் 50 இசி 2 மில்லி / லிட்டர் என்ற அளவில் தெளிக்க வேண்டும். செம்பான் சிலந்தி (டெட்ராநைகஸ் சின்னபெரியன்ஸ்) இளம் குஞ்சுகளும் முதிர்ந்த சிலந்திகளும் கூட்டம் கூட்டமாக இலையின் அடிப்பகுதியிலிருந்து கொண்டு சாற்றை உறிஞ்சுவதால் இலைகள் சுருங்கி காணப்படும். கட்டுப்படுத்தும் முறைகள் தாக்கப்பட்ட இலைகளை சேகரித்து அழிக்கவும். டைகோபால் 18.5 இசி 2.5 மி.லி. / லிட்டர் (அ) நனையும் கந்தகத் தூள் 50 சதவீதம் 2 கிராம் / லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். ஆதாரம்: வேளாண் பூச்சியியல் துறை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் - 641 003