மூன்று, நான்கு மற்றும் ஐந்தாம் நிலைப்புழுக்கள் முதிர்ந்த புழுக்கள் எனப்படுகின்றன. பொதுவாக இப்பருவத்தில் வெப்பநிலை 250 செல்சியஸ் என்ற அளவிலும் ஈரப்பதம் 70 சதமும் வளர்ப்பறைகளில் இருக்க வேண்டும். முதரிந்த பட்டுப்புழுக்கள் இரு வகைகளில் வளர்க்கப்படுகின்றன இலை அறுவடை முறை தண்டு அறுவடை முறை இலை அறுவடை முறை இம்முறை பட்டுப்புழுவின் வளர்ச்சிப் பருவத்திற்கேற்ற வகையில் மல்பெரி இலைகள் பறிக்கப்பட்டு பின் வளர்பறைகளுக்கு கொண்டு வரப்படுகின்றன. இலைகள் புழு வளர்ப்புத்தட்டுகளில் பரப்பப்பட்ட புழுக்கள் அவற்றில் வளர்க்கப்படுகின்றன. இம்முறையில் வளர்க்க வேலையாட்களின் தேவை அதிகம், செலவும் அதிகம். ஆகவே விவசாயிகள் தற்போது இம்முறையை பின்பற்றுவதில்லை. ஆய்வுக் கூடங்களில் பரிசோதனைத் திடல்களில் மட்டும் இம்முறை பின்பற்றப்படுகிறது. தண்டு அறுவடை முறை இம்முறையில் மல்பெரித் தோட்டங்களிலிருந்து இலைகளுடன் கூடிய தண்டுகள் அறுவடை செய்யப்பட்டு வளர்ப்பறைகளுக்கு அவை எடுத்து வரப்படுகின்றன. இம்முறை, இலை அறுவடை முறையை விட எளிதானது. வேலையாட்களின் தேவை குறைவு, லாபகரமானது. ஆகவே பட்டுப்புழு விவசாயிகளால் பின்பற்றப்படுகின்றது. புழு வளர்ப்புத் தாங்கிகள் புழுக்களை வளர்ப்பதற்கு, மரம் அல்லது இரும்புச் சட்டங்களால் ஆன தாங்கிகள் அமைக்கப்பட வேண்டும். இந்த தாங்கிகளில் மெலிதான மூங்கில் சட்டங்களைக் கொண்டோ கம்பி வலைகளைக் கொண்டோ 50 செ.மீ. இடைவெளியில் மூன்று படுக்கைகளை, கட்டில் போன்று பின்ன வேண்டும். தண்டு அறுவடை முறை கவாத்து செய்த 60 முதல் 70 நாட்களில் மல்பெரித் தண்டுகளை அறுவடை செய்து மேற்கூறிய படுக்கைகளில் நீளவாக்கில் போட வேண்டும். தண்டுகளின் நுனிகள் எதிரெதிராக அமையுமாறு மாற்றி அடுக்குவதால் அனைத்துப் புழுக்களுக்கும் தரமான இலை கிடைக்க ஏதுவாகிறது. வளர்ப்புப் படுக்கைகளை புழுக்களின் ஐந்தாம் பருவத்தின் இரண்டாம் நாளில் சுத்தம் செய்ய வேண்டும். புழுக்களுக்கு தகுந்த இடைவெளியும், காற்றோட்டமும், சுகாதாரச் சூழலும் கிடைக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் உணவளிக்கும் முன், மல்பெரித் தண்டுகளின் மீது படுக்கை கிருமி நாசினித் தூளைத் தூவ வேண்டும். இதனால் நோய்க் கிருமிகளின் தொற்று பரவாது. தவிரவும் புரதச் சத்து கொண்ட சோயா மாவுத் தூளை ஒரு கிலோத் தண்டுக்கு 5 கிராம் என்ற அளவில் இலைவழி உணவாக அளிப்பதன் மூலம் கூடுதல் பட்டுக்கூடு மகசூல் பெறலாம். ஐந்தாம் நிலைப் புழுக்கள் நன்கு முதிர்ச்சியுற்றால் புழுக்களில் மேல் தோல் மேன்மையாகி பழுப்பு நிறத்தில் மாறத் தொடங்கும். இது பட்டுப்புழுக்கள் கூடு கட்டத் தயார்ராவதற்கு தோன்றும் அறிகுறிகள். புழுக்களைப் பட்டுக்கூடு படல்களில் எடுத்து விட வேண்டும். முதிர்ந்த பட்டுப்புழுக்கள் தங்கள் பட்டுச்சுரப்பிகளில் சுரக்கும் புரதச்சாற்றைக் கொண்டுபட்டுக்கூடுகளைப் பின்னுகின்றன. சந்திர வளையம் போன்று இருக்கும் பட்டுக்குடு பட்கள் ‘சந்திரகி’ எனப்படும் இப்படல்கள் மெலிதான மூங்கில் சட்டங்களைக் கொண்டு சீரான இடைவெளியில் வளையம் போன்று அமைந்தவை. இதனைத் தவிர நெட்ரிகா என்ற பிளாஸ்டிக் வலைப் படல்களும், சுழல் சந்திரகி என்ற அட்டைச்சட்ட பட்டுக்கூடு படல்களும் புழக்கத்திலுள்ளன. ஐந்து முதல் ஏழு நாட்களில் பட்டுக்கூடுகள் உறுதியாகும் போது பட்டுக்கூடுகளை அறுவடை செய்யலாம். அறுவடை செய்யப்பட்ட பட்டுக்கூடுகள் இதற்கென அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட பட்டுக்கூடு சந்தைகளுக்கு உடனடியாக விற்பனைக்கு எடுத்துச் செய்யப்பட்டு விற்கப்படுகின்றன ஆதாரம்: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் - பட்டு வளர்ச்சித் துறை