<div id="MiddleColumn_internal"> <p style="text-align: justify;">விவசாயிகள் தீவனச் சோளம் பயிரிட்டு, தங்களது கால்நடைகளுக்கான தீவனச் செலவைக் குறைக்கலாம்</p> <p style="text-align: center;"><img class="image-inline" src="https://static.vikaspedia.in/media_vikaspedia/ta/images/agriculture/b9abbfbb1ba8bcdba4-ba8b9fbc8baebc1bb1bc8b95bb3bcd/copy3_of_26.jpg" width="420" height="237" /></p> <h3>பருவம்</h3> <p style="text-align: justify;">இறவைப் பயிராக ஜனவரி - பிப்ரவரி, ஏப்ரல் - மே மாதங்களில் தீவனச் சோளம் பயிரிட உகந்த மாதங்கள். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பயிரிடலாம். மானாவாரிப் பயிராக ஜூன் - ஜூலை, செப்டம்பர் - அக்டோபர் மாதங்களிலும் அனைத்து மாவட்டங்களில் பயிரிடும் வாய்ப்புள்ளது.</p> <p style="text-align: justify;"><strong>ரகங்கள்</strong></p> <p style="text-align: justify;">கோ எஃப், எஸ் 29, கோ 31 (மறுதாம்பு சோளம்) ரகங்கள் சிறந்தவை. தீவனச் சோளத்துடன் கோ 5, கோ எஃப் சி 8 ரக தட்டைப்பயறு சேர்த்து ஊடுபயிராகப் பயிரிட்டால் சத்தான தீவனம் பெறலாம்.</p> <h3>சாகுபடி குறிப்புகள்</h3> <p style="text-align: justify;">தீவனச் சோளம் கோ 31 ரகத்தை ஆண்டு முழுவதும் இறவைப் பயிராகப் பயிரிடலாம். ஒருமுறை விதைத்து பலமுறை அறுவடை செய்யலாம்.</p> <p style="text-align: justify;"><strong>நிலம்</strong></p> <p style="text-align: justify;">நீர் தேங்காத நல்ல வடிகால் வசதியுள்ள நிலத்தைத் தேர்வு செய்ய வேண்டும். நிலத்தைத் தயார் செய்யும்போது 2 அல்லது 3 முறை உழுது பண்படுத்த வேண்டும். பண்படுத்தப்பட்ட நிலத்தில் 60 செ.மீ. இடைவெளியில் பார்கள் அமைக்க வேண்டும். உழும் முன்பு ஹெக்டேருக்கு 25 டன் தொழுவுரம் இடுதல் அவசியம்.</p> <p style="text-align: justify;"><strong>விதையளவு</strong></p> <p style="text-align: justify;">ஹெக்டேருக்கு 5 கிலோ விதை போதும். 30-க்கு 15 செ.மீ. இடைவெளியில் விதைகளை பார்களின் இருபுறமும் விதைக்க வேண்டும். விதை உற்பத்தி செய்ய 60-க்கு 15 செ.மீ. இடைவெளியில் விதைக்க வேண்டும்.</p> <h3 style="text-align: justify;">உர நிர்வாகம்</h3> <ul> <li style="text-align: justify;">அடியுரமாக தழை, மணி, சாம்பல் சத்து ஆகியவற்றை 45: 40: 40 என்ற விகிதாசாரத்தில் இட வேண்டும்.</li> <li style="text-align: justify;">விதைத்த 30-ஆவது நாளில் 45 கிலோ யூரியா இட வேண்டும். ஒவ்வோர் ஆண்டு முடிவுக்குப் பிறகு 45: 40: 40 கிலோ தழை, மணி, சாம்பல் சத்து இட வேண்டியது அவசியம்.</li> </ul> <h3>களை நிர்வாகம்</h3> <p style="text-align: justify;">விதைத்த 25 அல்லது 30 நாளில் முதல் களை எடுக்க வேண்டும். பிறகு தேவைப்படும்போது ஒவ்வொரு அறுவடைக்குப் பின்பும் ஒருமுறை களையெடுத்து உரமிட வேண்டும்.</p> <p style="text-align: justify;"><strong>நீர்ப்பாசனம்</strong></p> <p style="text-align: justify;">விதைத்தவுடன் நீர்ப் பாய்ச்சி மூன்றாம் நாள் உயிர்த் தண்ணீர் கொடுத்த பிறகு 7 அல்லது 10 நாள்களுக்கு ஒருமுறை மண் வகை, மழை அளவைப் பொறுத்து நீர் பாய்ச்ச வேண்டும். தீவனச் சோளத்தில் பயிர்ப் பாதுகாப்பு பொதுவாக தேவையிராது.</p> <p style="text-align: justify;"><strong>பசுந்தீவன அறுவடை</strong></p> <p style="text-align: justify;">50 விழுக்காடு பூக்கும் தருணத்தில் அறுவடை செய்யலாம். முதல் அறுவடையானது விதைத்த 65 முதல் 70 நாளில் மேற்கொள்ளலாம். அடுத்த அறுவடைகளை 50 நாட்களுக்கொருமுறை மேற்கொள்ள வேண்டும்.</p> <p style="text-align: justify;"><strong>விதை அறுவடை</strong></p> <p style="text-align: justify;">விதைத்த 110 அல்லது 125ஆவது நாளில் அறுவடை செய்யலாம்.</p> <p style="text-align: justify;"><strong>பசுந்தீவன மகசூல்</strong></p> <p style="text-align: justify;">ஹெக்டேருக்கு ஆண்டுக்கு 192 டன்கள் கிடைக்கும். 6 அல்லது 7 முறை அறுவடை செய்ய வேண்டும்.</p> <p style="text-align: justify;"><strong>விதை மகசூல்</strong></p> <p style="text-align: justify;">ஹெக்டேருக்கு 1,000 கிலோ விதை கிடைக்கும். ஆண்டுக்கு 3 முறை அறுவடை செய்யலாம். விதை உறக்க நிலை 45 முதல் 60 நாளாக உள்ளது. எனவே, அறுவடைக்குப் பிறகு 60 நாள் கழித்து விதைக்க வேண்டும்.</p> <p style="text-align: justify;">ஆதாரம்: தினமணி நாளிதழ்</p> </div>