<div id="Middlecolumn_internal"> <h3 style="text-align: justify;">தீவனத் தேவை</h3> <p style="text-align: justify;">வெள்ளாடுகள் உடல் எடையில் 4 முதல் 5% காய்வு நிலையில் தீவனம் ஏற்கும். ஆகவே, 25 கிலோ ஆட்டிற்கு 1 முதல் 1.25 கிலோ தீவனம் காய்வு நிலையில் தேவைப்படும். இதனைப் பசுந்தழை, உலர்ந்த தீவனம், கலப்புத் தீவனமாகக் கீழ் வருமாறு வழங்கலாம்.</p> <p style="text-align: justify;">காய்வு நிலையில்</p> <p style="text-align: justify;">பசுந்தழை / புல் 3 கிலோ காய்வு நிலையில் 0.75 கிலோ</p> <p style="text-align: justify;">உலர் தீவனம் 300 கிராம் காய்வு நிலையில் 0.25 கிலோ</p> <p style="text-align: justify;">கலப்புத் தீவனம் 250 கிராம் காய்வு நிலையில் 0.24 கிலோ</p> <p style="text-align: justify;">காய்வு நிலையில் மொத்தம் 1.24 கிலோ</p> <p style="text-align: justify;"><img class="image-inline" src="https://static.vikaspedia.in/media_vikaspedia/ta/images/agriculture/b95bbebb2bcdba8b9fbc8-baabb0bbebaebb0bbfbaabcdbaabc1/bb5bc6bb3bcdbb3bbeb9fbc1-b9abc6baebcdbaebb1bbf-b86b9fbc1-bb5bb3bb0bcdbaabcdbaabc1/goatFeed.jpg" /></p> <h3 style="text-align: justify;">தீவன பராமரிப்பு</h3> <p style="text-align: justify;">பரண்மேல் வெள்ளாடு வளர்ப்பு முறை வெற்றிகரமாக இருக்க, பசுந்தீவனம் தான்முக்கிய பங்களிக்கிறது. பெரும்பாலான விவசாயிகள் தீவனப்பற்றாக்குறையால் தான் வெள்ளாடு வளர்ப்பை சிறந்த முறையில் செய்ய இயலவில்லை. எனவே 100ஆடுகளை இந்த முறையில் வளர்க்க குறைந்த பட்சம் 4 ஏக்கர் பசுந்தீவனத்திற்கு என ஒதுக்க வேண்டும். வாரம் இரண்டு முறை தண்ணீர் பாய்ச்சக்கூடிய விவசாய நிலமாக இருத்தல் வேண்டும். தென்னையில் ஊடுபயிராக பசுந்தீவனம் வளர்க்க அதன் இடைவெளிக்கு ஏற்ப 6 முதல் 8 ஏக்கர் நிலம் அவசியம்.</p> <h3 style="text-align: justify;">பசுந்தீவன வகைகள்</h3> <p style="text-align: justify;">கோ-3, கோ-4, வேலிமசால், குதிரை மசால் வகைகள், தீவன சோள புல்வகைகள்,அகத்தி, சித்தகத்தி, சவுண்டல் ரகங்களை வளர்க்கலாம். இதனை 50 சென்ட் நிலத்தில்ஒவ்வொன்றையும் வளர்க்கலாம். பண்ணை அமைப்பதற்கு முன் பசுந்தீவனங்களை பயிரிட்டு விட வேண்டும். ஏனென்றால், முதல் அறுவடை 60முதல் 70 நாட்கள் குறைந்த பட்சமும், 80 முதல் 90 நாட்கள் அதிகபட்சமாகவும் தேவைப்படும். இந்த இடைவெளியில் கொட்டகை அமைத்தல் வேண்டும். இதற்கு பின்பே ஆடுகளை வாங்கி வர வேண்டும்.</p> <h3 style="text-align: justify;">அடர் தீவனம்</h3> <p style="text-align: justify;">வெள்ளாடுகளுக்கு நாள் ஒன்றுக்கு அதன் வயதிற்கேற்ப அடர்தீவனம் அளிக்கவேண்டும். 3 மாதம் முதல் 6 மாத குட்டிகளுக்கு 25 கிராம் முதல் 35 கிராம்தீவனமும், 6 மாதம் முதல் 12 மாதம் வரையில் 50 கிராம் முதல் 100 கிராம்வரையிலும், சினைப்பருவத்தில் 175 கிராம், ஈன்ற ஆடுகளுக்கு 200 முதல் 250 கிராம்,கிடாக்களுக்கு 300 கிராம் என்ற அளவிலும் அளிக்க வேண்டும்.</p> <p style="text-align: justify;">அடர்தீவனம் என்ற தீவனத்தின் கலவை (100 கிலோவிற்கு) விகிதம் கீழ்கண்ட அளவில் இருக்க வேண்டும்.</p> <p style="text-align: justify;">மக்காச்சோளம் மற்றும் கம்பு 35 முதல் 40 கிலோ, ராகி மற்றும் இதர தானியங்கள் 10கிலோ, கடலைப்புண்ணாக்கு 20 கிலோ, கோதுமை தவிடு மற்றும் அரிசி தவிடு 10கிலோ, துவரம் பொட்டு மற்றும் பாசிப் பொட்டு 17 கிலோ, தாதுஉப்பு 2 கிலோ,சாதாரண உப்பு 1கிலோ என்ற அளவில் 100 கிலோ அடர்தீவனத்தின் பகுதிகளாக இருக்க வேண்டும்.</p> <h3 style="text-align: justify;">மேலும் சில மாற்று தீவனங்கள்</h3> <p style="text-align: justify;">பகுதிக்கு ஏற்றாற்போல் கிடைக்கும் அளவை பொருத்து ஆடுகளின் உடல் எடையும் கருத்தில் கொண்டு கொடுக்கலாம்.</p> <p style="text-align: justify;"><strong>புளியங்கொட்டை</strong></p> <p style="text-align: justify;">இது சிறந்த ஆட்டுத் தீவனம். தோல் நீக்கி, அரைத்துத் தீவனமாகக் கொடுக்கலாம். வீட்டில் உள்ள புளியங்கொட்டையை மலிவான விலைக்கு விற்றுவிட்டு, அதிக விலையில் ஆட்டுத் தீவனம் வாங்குவது சரியில்ல.</p> <p style="text-align: justify;"><strong>வேலிக் கருவை நெற்றுகள்</strong></p> <p style="text-align: justify;">இதுவும் தானியத்திற்கு ஈடான சிறந்த ஆட்டுத் தீவனம். இதில் 15 / 25% சர்க்கரைப் பொருள் உள்ளதால், தினம் 100 / 200 கிராம் மட்டுமே கொடுக்கலாம்.</p> <p style="text-align: justify;"><strong>பிண்ணாக்குகள்</strong></p> <p style="text-align: justify;">கடலை பிண்ணாக்கு, எள்ளு பிண்ணாக்கு,தேங்காய் பிண்ணாக்கு,சோயா பிண்ணாக்கு மற்றும் பருத்திக் கொட்டைப் பிண்ணாக்கு பயன்படுத்தலாம்.</p> <p style="text-align: justify;"><strong>தவிடு</strong></p> <p style="text-align: justify;">அரிசித் தவிடு அல்லது கோதுமை தவிடு கொடுக்கலாம்.</p> <p style="text-align: justify;"><strong>தானிய வகைகள்</strong></p> <p style="text-align: justify;">நவ தானியங்களைக் கால்நடைத் தீவனத்தில் சேர்த்துக் கொள்ளலாம். சோளம், கம்பு, மக்காச்சோளம், கேழ்வரகு போன்றவை சிறந்தவை. இது தவிரப் பயறு வகைகளில் கொள்ளு (காணம்) பொதுவாக மலிவான விலையில் கிடைப்பதால், இதனையும் அரைத்துத் தீவனத்தில் சேர்க்கலாம். இதன் காரணமாகப் பிண்ணாக்கு அளவைக் கலப்பது தீவனத்தில் குறைக்கலாம். எல்லாவிதப் பிண்ணாக்கும் வெள்ளாடுகளுக்கு ஏற்ற தீவனமாகாது. பொதுவாகத் தழையில் கிடைக்காத பாஸ்பரஸ் இவற்றில் அதிகம் கிடைக்கும்.</p> <h3 style="text-align: justify;">கலப்புத் தீவனம்</h3> <p style="text-align: justify;">வெள்ளாடுகளுக்கு மாடுகளைப் போன்று அதிக அளவில் கலப்புத் தீவனம் பண்ணையாளர்களுக்கு அதிகச் செலவை உண்டு பண்ணும். பெரும் பாலும் வெள்ளாடுகளுக்கு கலப்புத் தீவனம் அளிக்கப்படுவதில்லை.</p> <p style="text-align: justify;">பொதுவாக, ஆழ்கூள அல்லது கொட்டில் முறையில், அதிக எண்ணிக்கையில் வெள்ளாடு வளர்ப்பவர்கள் கலப்புத் தீவனங்களைத் தாங்களே தயாரித்துக் கொள்ளலாம். தவிடு, பிண்ணாக்கு, நவதானியம் ஆகிய மூன்றும் கீழ்க்காணும் விதத்தில் கலந்து தீவனம் தயாரிக்கலாம். இதில் 1% உப்பு, 2% தாது உப்புக் கலவை சேர்க்கப்பட வேண்டும். ஆகவே</p> <p style="text-align: justify;">தானியம் 50%</p> <p style="text-align: justify;">பிண்ணாக்கு 20%</p> <p style="text-align: justify;">தவிடு 17%</p> <p style="text-align: justify;">தாதுஉப்பு 2%</p> <p style="text-align: justify;">உப்பு 1%</p> <p style="text-align: justify;">என்னும் வீதத்தில் வெள்ளாடுகளுக்குக் கலப்புத் தீவனம் தயாரிக்கலாம். கலப்புத் தீவனத்தில் 12 – 15% செரிக்கும் புரதமும், 60 – 70 மொத்தச் செரிக்கும் சத்துக் கூறும் இருக்க வேண்டும்.</p> <p style="text-align: justify;"><strong>வேர்க்கடலைக் கொடி</strong></p> <p style="text-align: justify;">கடலைக்கொடி, கடலை பயிரிடும் தமிழ் நாட்டின் எல்லாப் பகுதிகளிலும், ஆடு மாடுகளுக்குத் தீவனமாகக் கொடுக்கப்படுகின்றது. இதுவும் ஒரு சிறப்பு காய்ந்த தீவனமாகும்.</p> <p style="text-align: justify;"><strong>துவரை இலை</strong></p> <p style="text-align: justify;">பயிர் விளைந்து துவரையை வெட்டித் துவரைப் பருப்பைப் பிரிக்கும்போது, உதிரும் இலை, நெற்றுக் கூடுகளை ஆடுகளுக்குத் தீவனமாக சேர்த்து வைக்கலாம். இந்த தவிரப் பருத்திச் சாகுபடிப் பகுதிகளில் பருத்தி இலைகளையும், சேகரித்துத் தீவனமாக அளிக்கலாம். இது போன்றே மொச்சை, அவரைச் செடிகளில் உதிர்ந்த இகைளை வெள்ளாடுகளுக்குத் தீவனமாக அளிக்கலாம்.</p> <p style="text-align: justify;">உலர் தீவன அவசியம் என்ன? பொதுவாக அசைபோடும் கால்நடைகள், சிறப்பாக வெள்ளாடுகள் பசுந்தீவனத்தை மட்டும் உண்டு அவற்றின் முழுத் தீவனத் தேவையையும் நிறைவு செய்துவிட முடியாது போகலாம். முக்கியமாக அவற்றிற்குத் தேவைப்படும் அளவு காய்வு நிலைத் தீவனத் தேவை (Dry Matter) அடைய முடியாது போகும். ஆகவே, அவற்றின் பசி அடங்காது. வயிறு நிறையத் தீவனத்தைத் தின்றுவிட்டு, அதற்கு மேல் தின்ன முடியாது இருக்கும் வெள்ளாடுகள் இரவில் பசியால் துன்புறும். காரணம், பசுந்தீவனம் பெரு வயிற்றின் இடத்தை அடைத்துக் கொள்ளும். ஆகவே மாடுகளுக்கு இரவில் சிறிதளவு காய்ந்த தீவனம் அரைக்கிலோ கொடுக்கலாம் அல்லது பகல் வேளையில் பாதியும் இரவில் பாதியுமாகக் கொடுக்கலாம்.</p> <h3 style="text-align: justify;">கேள்வி பதில்கள்</h3> <p style="text-align: justify;">1. வெள்ளாடுகளுக்கு மேய்ச்சல் அவசியமா?</p> <p style="text-align: justify;">மேய்ச்சல் முறை வளர்ப்பில் ஆடுகள் மேய்ச்சலை மட்டுமே நம்பியுள்ளன. மித தீவர முறை வளர்ப்பில் போதிய அளவு தீவனப்புற்கள் கிடைக்கச் செய்தல் அவற்றின் வளர்ச்சிக்கு அவசியம்</p> <p style="text-align: justify;">2. ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்ப உகந்த நேரம் எது?</p> <p style="text-align: justify;">வெயில் அதிகம் இல்லாத நேரங்களான காலை 6.30 முதல் 9.30 வரையிலும், மாலை 3.00 முதல் 7.00 வரையிலும் ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்ப உகந்த நேரங்கள்.</p> <p style="text-align: justify;">3. தீவனம் மற்றும் பசுந்தீவனங்கள் விரயமாவதை எவ்வாறு தடுக்கலாம்?</p> <p style="text-align: justify;">அடர் தீவனத்தை குச்சித் தீவனமாகவோ, குருணையாகவோ அளிப்பது தீவன விரயத்தைக் குறைக்கும். மாவாக அளிக்கும்போது சிறிதளவு தண்ணீரைத் தெளித்தபின் அளித்தால் தீவனம் விரயமாவது தடுக்கலாம். பசுந்தீவனத்தை உயரத்தில் கட்டித் தொங்கவிடுவதன் மூலமும், சிறு துண்டாக நறுக்கி அளிப்பதன் மூலமும் தீவன விரயத்தை தடுக்கலாம்.</p> <p style="text-align: justify;">ஆதாரம்: எம் எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை</p> </div>