<div id="MiddleColumn_internal"> <p style="text-align: justify;">வீட்டில் தோட்டம் வைத்திருப்பவர்கள் செடிகளை நன்கு பராமரித்து வந்தால் மட்டும் போதாது. அது வளர்வதற்கு அச்சாரமாக இருக்கும் மண்ணின் தன்மையையும் அவ்வப்போது பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம். அவை சிறந்ததாக இருந்தால்தான் செடிகளில் இருந்து கிடைக்கும் காய்கறிகளும் சத்தானதாக மாறும். மண்ணில் இருக்கும் சத்துக்களை உறிஞ்சியே செடிகள் வளர்கின்றன என்பதால் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.</p> <h3 style="text-align: justify;">இயற்கை விவசாயம்</h3> <ul> <li style="text-align: justify;">செடிகளுக்கு உரம் போட்டால் மட்டும் நல்ல வளர்ச்சியை பெற்று விடாது. அந்த உரம் இயற்கையோடு இயைந்ததாக அமைந்தால்தான் காய்கறிகளும் நல்ல சத்தினை கொடுக்கும்.</li> <li style="text-align: justify;">அதனால்தான் இயற்கை விவசாயத்தில் காய்கறிகளை விளைவிக்க பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள்.</li> <li style="text-align: justify;">அதன் மூலம் ரசாயன கலப்பில்லாத காய்கறிகள் கிடைப்பதற்கு வழிவகை ஏற்படுகிறது. அது உடல் ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக அமைகிறது என்பதால் வீட்டிலேயே காற்கறி செடிகளை வளர்ப்பதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள்.</li> </ul> <p style="text-align: justify;"><strong>காய்கறி கழிவுகள்</strong></p> <p style="text-align: justify;">அந்த செடிகளுக்கு தேவையான உரத்தேர்விலும் கூடுதல் கவனம் செலுத்துகிறார்கள். இயற்கை உர கலவையை கொண்டு செடிகளுக்கு புத்துணர்வு கிடைக்க செய்கின்றனர். அத்தகைய இயற்கை உர கலவையை நாமே வீட்டில் தயார் செய்து செடிகளுக்கு பயன்படுத்தலாம்.</p> <h3 style="text-align: justify;">பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்</h3> <p style="text-align: justify;">வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் காய்கறி கழுவுகளையே இயற்கை உரங்களாக மாற்றி மீண்டும் செடிகளில் காய்கறிகளை மலர செய்யலாம். அந்த அளவிற்கு காய்கறி கழிவுகள் செடிகளுக்கு ஏற்ற இயற்கை உரக்கலவையாக மாறி இருக்கிறது.</p> <p style="text-align: justify;"><strong>மட்க செய்யலாம்</strong></p> <ul> <li style="text-align: justify;">அதற்கு வீட்டில் தோட்டம் வைத்திருப்பவர்கள் சிறிய குழி தோண்டி அதில் சமையலுக்கு பயன்படுத்தும் காய்கறிகளை சீவிய தோல்களை போட்டு வைக்கலாம். அதனை மண் கொண்டு மூடி விட வேண்டும். அதனுடன் முட்டை ஓடுகள், உதிர்ந்த மர இலைகள், உபயோகப்படுத்திய டீத்தூள், மாடுகளின் சாணம் போன்றவற்றையும் சேர்த்து நன்கு மட்க செய்யலாம்.</li> <li style="text-align: justify;">சில நாட்களுக்கு பிறகு அதனை தோண்டி எடுத்து பார்த்தால் அது சிறந்த இயற்கை உரமாக மாறி இருக்கும்.</li> <li style="text-align: justify;">மண் தோண்டி குழி அமைக்க இயலாவிட்டால் உடைந்த மண்பானை, பிளாஸ்டிக் வாளிகளையே குழியாக மாற்றி விடலாம். அதில் காய்கறி உள்ளிட்ட மட்கும் கழிவுகளை போட்டு அதனுடன் மண் கலந்து வைத்தால் போதும். வைக்கோல், காய்ந்த இலைகள், காய்ந்த புற்களையும் போட்டு வைக்கலாம்.</li> </ul> <p style="text-align: justify;"><strong>ஈரப்பதம்</strong></p> <p style="text-align: justify;">அப்படி செய்தால் விரைவாகவே மட்கி சிறந்த இயற்கை உரமாக மாறி விடும். எனினும் ஒரு வார இடைவெளிக்கு பிறகு அவ்வப்போது குழிகளை கிளறி பார்த்து வர வேண்டும். அப்படி செய்யும்போது காற்று உட்புகுந்து ஈரப்பதத்தை மக்கும் தன்மைக்கு மாற்றிவிடும். அதுபோல் கழிவுகள் சேர்ந்த கலவையில் ஈரப்பதம் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.</p> <p style="text-align: justify;">இயற்கை உரத்தை போல இயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகளும் செடிகளுக்கு அவசியமான ஒன்று. இல்லாவிட்டால் செடிகளில் பூக்கள் பூக்கும் பருவத்தில் பூச்சிகளுக்கு இரையாகி போய்விடக்கூடும்.</p> <h3 style="text-align: justify;">பூச்சுக்கொல்லி</h3> <p style="text-align: justify;">பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கும் சிரமப்பட வேண்டியதில்லை. வீட்டில் உபயோகப்படுத்தும் பொருட்களையே பூச்சிக்கொல்லி மருந்துகளாக மாற்றி விடலாம். அதிலும் முட்டை ஓடுகளை பயன்படுத்தலாம். அதனை துகள்களாக நொறுக்கி செடிகளின் மீது தூவி வரலாம். அதனுடன் உப்பையும் சேர்த்து செடிகள் மீது தூவினால் பூச்சிகள் நெருங்காது.</p> <p style="text-align: justify;">செடிகளுக்கு மத்தியில் தக்காளி செடிகளையும் இடை, இடையே வளர்த்து வரலாம். ஏனெனில் தக்காளி இலைகளுக்கும் பூச்சிகளை விரட்டும் வாசம் உண்டு. அதன் இலைகளை பிழிந்து சாறு எடுத்து செடிகள் மீதும் தெளித்து வரலாம். டீ, காபி தூள்களின் கழிவுகளும் செடிகளுக்கு பாதுகாப்பு கொடுக்கும்.</p> <p style="text-align: justify;">ஆதாரம்: தினத்தந்தி</p> </div>